சிறு வயதிலிருந்தே பல தமிழ்ப் புத்தகங்களைப் படித்து வளர்ந்த திருமதி சுப்பு சுபா சக்திதேவி, ஏழாண்டுகளாகத் தமிழ் ஆசிரியராக இருந்து வருகிறார்.
2019ஆம் ஆண்டு முதல் ஊட்ரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்றுக்கொடுக்கும் இவர், தனது உயிரோட்டமான, அர்த்தமுள்ள தமிழ்ப் பாடங்களுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்.
மொழியைக் கற்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ் பாரம்பரியத்தையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் இவர், “சிறு வயதில் ‘பொன்னியின் செல்வன்’ நூல்தான் என் தமிழார்வத்தை வெகுவாக வளர்த்தது; இன்னும் பல நூல்களை படிக்கும் ஆவலை என்னுள் தூண்டியது.
“அதேபோல், நான் கற்றுக்
கொடுக்கும் பாடங்களும் தமிழ் பாரம்பரியதுடன் பிணைத்து ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளேன்,” என்று குறிப்பிட்டார் திருமதி சக்திதேவி.
தனது மாணவர்களின் தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்தின் புரிதலை மேலும் ஆழப்படுத்த, திருமதி சக்திதேவி தமது வகுப்புகளில் கவிதைப் பாடங்கள், மருதாணி வரைதல், கோலம் போடுதல், பாரம்பரிய விளையாட்டுகளான ‘சொட்டாங்கல்’ போன்றவற்றை வகுப்புகளில் அறிமுகப்படுத்துகிறார்.
“இதுபோன்ற அனுபவங்கள் தமிழ் மொழிப் புழக்கத்தை அதிகரிக்க உதவுவதோடு நம் பாரம்பரியத்தின் மீதான மாணவர்களின் மதிப்பை மேம்படுத்த ஒரு வழியாக அமைகிறது.
பாரம்பரிய நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், ஐம்புலன்களையும் பயன்படுத்தி அவர்களால் பற்பல கோணங்களிலிருந்து நம் மொழி யையும் பாரம்பரியத்தின் சிறப்புகளையும் கற்றுக்கொள்ள முடிகிறது.
“தமிழ் மொழியையும் பாரம்பரியத்தையும் ஒருங்கிணைத்து கற்றுக்கொடுப்பது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
மொழி, பாரம்பரியம் போன்றவற்றைத் தாண்டி, தமது கற்றல் முறை மூலம் பெற்றோர்-குழந்தை பிணைப்பை வளர்க்கவும் திருமதி சக்திதேவி முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார்.
பாடத்தின் ஒரு நடவடிக்கையாக, தமது மாணவர்களின் குழந்தைப் பருவ அனுபவங்களைப் பற்றி அவர்களின் பெற்றோரை நேர்காணல் செய்ய வழிகாட்டியுள்ளார். இம்முயற்சி பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
“வீட்டுப்பாடத்தை சுவாரசியமாக்கவும் தமிழ் மொழிப் புழக்கத்தை வீட்டுச் சூழலில் வளர்க்க வும் இதுபோன்ற நடவடிக்கைகளை நான் செயல் படுத்துகிறேன். பெற்றோருடன் உரையாடுவதன் மூலம் குடும்பப் பிணைப்பும் வலுவாகிறது, தமிழ் பேசும் புழக்கமும் அதிகரிக்கிறது,” என்றார் திருமதி சக்திதேவி.
ஒரு கவிஞராகவும் திகழும் இவர், கவிதைகளுக்கான ‘தங்க முனை விருது’ பெற்றுள்ளார்.
தன்னம்பிக்கை ஊட்டும் தமிழ்ப் பாடல்கள் மூலம் மொழியாற்றலை வளர்ப்பதுடன் அது சார்ந்த ஆக்கபூர்வமான வகுப்பு விவாதங்கள் போன்ற வழிகளில் சுவாரசியமாக தனது பாடங்களை நடத்தி வருகிறார் இந்த ஆசிரியர்.
மாணவர்கள் தங்களது பாரம்பரியத்தை அறியும் விதத்திலும் தங்களது நண்பர்கள், பெற்றோரிடம் தமிழ் பேசும் புழக்கத்தை அதிகரிக்கும் வண்ணமும் திருமதி சக்திதேவியின் தனித்துவமிக்க பாடங்கள் அமைந்து வருகின்றன.