விமானத்துறைத் தொழில்நுட்பரான 50 வயது ஆரோக்கிய ராஜ் ஜேசன், அழகியல் துறையிலும் தற்போது கால் பதித்துள்ளார்.
அழகிய முதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ‘பிளேட்டினம் ஏஞ்சல்ஸ் மேனஜ்மெண்ட்’ நிறுவனத்தில் இணைந்துள்ள இவர், “வயது வெறும் எண்ணிக்கை மட்டுமே. எந்த வயதிலும் என்னைத் துடிப்புடன் வைத்துக்கொள்ள தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன்,” என்று கூறும் ஜேசனும், முதுமையுடன் வரக்கூடிய முகச் சுருக்கங்களும் நரை முடியும் அழகைக் கெடுப்பதாக ஒரு காலத்தில் நினைத்ததுண்டு.
தனது அழகான, கருமையான முடி நரைப்பதை விரும்பாத இவருக்கு நரை முடிக்குச் சாயம் பூசுவது ஒரு பழக்கமாக மாறியது.
ஆனால், மனைவி தந்த ஊக்கத்தால் பத்தாண்டுகளுக்கு முன்னர் சாயம் பூசுவதைக் கைவிட்டார் ஜேசன். நரை முடியை ஏற்றுக்கொண்டது தனது தன்னம்பிக்கையை உயர்த்தியது என்கிறார் இவர்.
“இளமையில் இருந்ததுபோல இப்போது நாம் இல்லையே என்ற வருத்தம் வயதாகும்போது எல்லாருக்குமே ஏற்படும்.
“பல்வேறு கடமைகளால் அலைக்கழிக்கப்படும்போது, நம்மைப் பராமரிப்பதற்கு நாம் முன்னுரிமை தருவதில்லை. ஊடகங்களும் விளம்பரங்களும் மூத்த அழகர்களைத் திரையில் கொண்டுவந்தால் மாற்றம் வரும்,” என்றார் ஜேசன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக முதன்முதலில் ஒரு விளம்பரத்தில் தோன்றிய இவர் அழகியல் துறையில் மூத்தோரைப் பிரதிநிதிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
நெற்றியிலும் உதடுகளுக்கு அருகிலும் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள், நரை முடி ஆகியவை ஒருவரின் அழகுக்கு மெருகூட்டுபவை என்கிறார் ஜேசன்,