சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உடல், மன, சமூக நலனில் அண்மைக்காலமாக கூடுதல் அக்கறை செலுத்தப்படுகிறது. இப்பிரிவினரின் நலன் காக்க, திட்டங்களையும் பணியிட விதிமுறைகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்துகிறது. பல சமூக, சமய, தொண்டூழிய அமைப்புகளும் இலவச, குறைந்த கட்டண மருத்துவ சேவைகளை வழங்குகின்றன. இவற்றை அறிந்து, பயன்படுத்துவது ஊழியர்கள் கைகளிலேயே உள்ளது. உடல் நலப் பிரச்சினைகள் பற்றித் தெரியவந்தால், வருமானம் குறையும், வேலை போகும் என்பது போன்ற தவறான எண்ணத்தால் பலரும் நாள்பட்ட நோய்களை தொடக்கத்திலேயே சரிப்படுத்தும் வாய்ப்பை இழக்கின்றனர். நலத்தோடு இருந்தால் அதிகம் உழைக்கலாம். மேலும், பாதிப்பு பெரிதாகும்போது செலவும் இழப்பும் அதிகமாகும் என்பதை பலரும் உணர்வதில்லை.
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியரில் 22 விழுக்காட்டினர் நிதி நெருக்கடியினால் சுகாதாரப் பராமரிப்பில் போதிய அக்கறை செலுத்த தயங்குவதாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையைச் சார்ந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாண்டு மே மாதம் ‘பிஎம்ஜெ ஓபன் அக்சஸ்’ எனும் முன்னணி மருத்துவ ஆய்விதழில் வெளிவந்த அந்த ஆய்வு, பெரும்பான்மையான வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்கள் பற்றியும் காப்புறுதி சலுகைகள் பற்றியும் விழிப்புணர்வு இல்லை என்றும் குறிப்பிடுகிறது. மேலும் 55 விழுக்காடு மருத்துவர்களுக்கு இது குறித்த போதிய தகவல்கள் தெரியவில்லை என்றும் ஆய்வு சுட்டியுள்ளது.
“பெரும்பான்மையான வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சொந்த நாட்டிலிருந்து நண்பர்கள் மூலம் மருந்துகளைத் தருவிப்பது, மருத்துவரின் ஆலோசனையின்றி கை மருத்துவம் செய்வது போன்ற சுய சிகிச்சைகளை அதிகம் நாடுகிறார்கள்,” என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு ஊழியர் சுகாதார ஆய்வாளராக உள்ள ஆயிஷா பர்வின், 34.
“இங்கு மருத்துவச் செலவு அதிகம், மருத்துவ விடுப்புகளினால் வருமானம் குறையும், தங்களுடைய தாய் மொழி பேசும் மருத்துவர்கள் அதிகம் இல்லை என்பன போன்ற பல காரணங்களினால் ஊழியர்கள் மருத்துவ சேவையை நாடுவதில்லை,” என்றும் கூறினார் வெளிநாட்டு ஊழியரின் காதாரப் பராமரிப்பில் பகுதி நேர முனைவர் பட்டப் படிப்பையும் மேற்கொண்டுள்ள ஆயிஷா.
மருத்துவப் பரிசோதனையில் நாள்பட்ட நோய்கள் இருப்பது தெரியவந்தால் வேலை போய்விடும் என்ற அச்சத்தினாலும் பல ஊழியர்கள் நோய் அறிகுறிகள் தென்பட்டாலும் அதற்குரிய பரிசோதனைகளை தவிர்க்கிறார்கள் என்றும் தங்களுடைய ஆய்வுகளிலும் கருத்துக்கணிப்புகளிலும் தெரியவந்துள்ளதாக இவர் குறிப்பிட்டார்.
இது நோயும் இல்லை;
நான் நோயாளியும் இல்லை
பெரும்பாலும் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கும் 40 வயது அன்பழகன் அர்ஜுனன், காலையில் ஒரு மணி நேர மெது வோட்டமும் இரவு உணவாக சப்பாத்தியும் வாரம் இருமுறை ‘தேனிக்காய் விதை’யும் உட்கொண்டாலே நீரிழிவு குணமாகிவிடும் என நினைக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியா சென்றபோது தமக்கு நீரிழிவு இருப்பதை அறிந்த இவர், தொடக்கத்தில் ஊரிலிருந்து வாங்கி வந்த மருந்தை உண்டார். நாளடைவில் அதையும் நிறுத்திவிட்டார்.
18 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் பணிபுரியும் இவர் சிங்கப்பூர் வந்து சம்பாதிக்கத் தொடங்கிய பின்னரே ஐந்து உடன்பிறப்புகளைக் கொண்ட இவரது குடும்பத்தின் நிதி நிலைமை உயர்ந்துள்ளது. தற்போது மாதம் சராசரியாக $1,500 வரை வருமானம் ஈட்டுகிறார். பெற்றோர், மனைவி, இரு பிள்ளைகள் இவரை நம்பி உள்ளனர்.
“கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை அநாவசியமாக மருத்துவத்துக்குச் செலவு செய்ய மனமில்லை. எனக்கு 40 வயதுதான் ஆகிறது. உடல்நலத்தோடுதான் இருக்கிறேன்,” என்பது இவரின் எண்ணமாக உள்ளது.
கவனக்குறைவு; அக்கறையின்மை
தனியார் மருத்துவமனையில் மூத்த தாதிமை மேலாளராக உள்ள முல்லை, 53, “பெரும்பான்மையான ஊழியர்கள் பொதுவாகவே உடல்நலத்தில் கவனம் செலுத்து வதில்லை,” என்றார்.
மருத்துவரின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கடைப்பிடித்தால் நோயாளி என்ற உணர்வு ஏற்பட்டுவிடும் என்பன போன்ற விழிப்புணர்வற்ற சிந்தனைகள் வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகம் காணப்படுவதாகவும் இவர் தெரிவித்தார்.
“எனினும், கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு இவர்களுடைய உடல்நல அக்கறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக் காலத்தில் ஊழியர்களின் தங்குமிடங்களிலும் பணியிடங்களிலும் அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு பற்றிய முகாம்களும் பகிர்வு அங்கங்களும் நடத்தப்பட்டன.
“அதன்பின்னர் முன்பைவிட அதிக அளவில் ஊழியர்கள் தாமாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதைக் காண முடிகிறது,” என்றும் திருவாட்டி முல்லை குறிப்பிட்டார்.
சுசீலா ராஜேந்திரன், 41, போன்று பெரும்பாலான பணிப்பெண்கள் அரசாங்கம் அவர்களுக்கு நிர்ணயித்துள்ள கட்டாய மருத்துவச்சோதனைகளுக்கு அப்பால் கூடுதலாக எதுவும் செய்துகொள்வதில்லை.
“காப்புறுதித் திட்டங்கள் பற்றி முதலாளியிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அடிப்படை மருத்துவ பரிசோதனை, ஈராண்டுகளுக்கு ஒருமுறை வேலை வொர்க் பர்மிட்டைப் புதுப்பிக்கும்போது முழு உடல் பரிசோதனை ஆகியவை மட்டுமே செய்வேன்,” என்றார் அவர்.
ஆங்கிலம் தெரியாததால் அச்சம்
ஆஸ்பெஸ்டாஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் 38 வயது செந்தில் பாண்டியன் சில மாதங்களுக்கு முன்னால் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வேலை பார்க்கும் இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே நோயின் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனை செய்து, நோய் உள்ளதாக கண்டறியப்பட்டால் வேலை போய்விடும் என்ற பயத்திலேயே இவர் எவ்வித மருத்துவ நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டார்.
ஒருநாள் பணியிடத்தில் மயங்கி விழவே, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காச நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இப்போது மாதம்தோறும் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும் இவர், “தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த எனக்கு வெகு சில ஆங்கில வார்த்தைகளே தெரியும். மருத்துவர்களும் தாதியர்களும் நன்முறையில் சிகிச்சை அளித்தாலும், அவர்கள் கூறுவதைப் புரிந்துகொள்ள சிரமம் இருப்பதால் மருத்துவமனைக்கு வருவதே பயமாக இருக்கும்,” என்றார்.
தொண்டூழிய அமைப்புகளின் மருத்துவ உதவி
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையுள்ள 53 வயது சுப்பிரமணியன் நவநாதனுக்கு கேலாங்கில் உள்ள ‘ஹெல்த்செர்வ்’ எனும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தொண்டு நிறுவனத்தில் மிகக்குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் மருத்துவ சேவை பேருதவியாக உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
‘ஹெல்த்செர்வ்’வில் மருத்துவ சேவையுடன் மனநல ஆலோசனை, ஆரோக்கிய உணவுமுறை உரைகள், உடற்பயிற்சி வகுப்புகள், அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றாலும் சுப்பிரமணியன் பயனடைந்துள்ளார்.
மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது இவருக்கு மருந்துகளுடன் சேர்த்து $15தான் செலவாகிறது.
இங்கு பெறும் மருத்துவ ஆலோ சனையால் இவர் வாழ்க்கைமுறைமாறியுள்ளது. உடல் எடையையும் ஏழு கிலோ வரை குறைத்துள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும் போதிய மருத்துவ தேவைகளும் உடலளவிலும் மனதளவிலும் நம்மை மேம்படுத்துகிறது என்பதை சற்றே கால தாமதமாக உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் பலருக்கு தொண்டு நிறுவனங்கள் இருப்பதே தெரிவதில்லை. வருமானம் ஈட்டு உடல்நலமும் மனநலமும் துணைபுரிய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் இத்தொண்டு நிறுவனத்தில் உடல்நல ஆலோசகராகப் பணிபுரியும் திருவாட்டி துர்கா அறிவன், 42.
எதிர்பாரா பணியிட விபத்துகள்
கட்டுமானப் பணியாளரான ராதாகிருஷ்ணன் அழகர்சாமி, 38, வேலையில் இடத்தில் தடுக்கி விழுந்ததில் கால் மூட்டில் பலத்த அடிப்பட்டது. பணியிட விபத்து என்பதால் மூட்டு அறுவைக்கான சிகிச்சை செலவை காப்புறுதி ஏற்றுக்கொண்டது. ஐந்து மாத மருத்துவ விடுப்புக்குப் பின்னர் சென்ற மாதம் மீண்டும் வேலைக்குச் சென்றார். தொடர்ந்து அரசாங்க மருத்துவமனையில் நிபுணத்துவ சிகிச்சைகளுக்கும் காப்புறுதி நடைமுறைகளைச் செய்து முடிக்கவும் நீண்ட நாள் ஆவதால், மருத்துவ விடுப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருமானம் பாதிக்கிறது என்பது ராதாகிருஷ்ணனின் கவலை.
36 வயது சந்திரமூர்த்தி மாசிலாமணிக்கு பணியிட விபத்தினால் அண்மையில் கால் பெருவிரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவச் செலவுக்கு காப்புறுதி உதவியது. ஆனால், தொடர் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க நேர்வதால் சில மருத்துவப் பரிசோத னைகளைத் தவிர்த்துவிடுகிறார்.
‘எஸ்ஜி’ விபத்து உதவி நிலையம் எனும் தொண்டு நிறுவனம் பணியிட விபத்துகளினால் அவதியுறும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக இயங்குகிறது.
“பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்களுடைய மருத்துவ காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இல்லை. வேலையில் சேரும்போதே காப்புறுதி பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்,” என்றார் இவ்வமைப்பின் தொண்டூழியரான சாமுவேல் குமார், 58.
விடுப்பு எடுத்தால் வருமானம் இருக்காது என்பதால் பல ஊழியர்கள் சிறிய விபத்துகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக விட்டு விடுகிறார்கள் என்றும் இவர் கூறினார்.
கவனக்குறைவுடன் இருந்தால் இதய நோய் ஏற்படலாம்
“ரத்தக் கொதிப்பு அல்லது அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை தேவை. கவனக்குறைவுடன் இருந்தால் நாளடைவில் இந்நோய்களினால் இருதய நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது,” என்றார் செங்காங் பொது மருத்துவமனை எலும்பியல் நிபுணரான டாக்டர் ஹமீத் ரசாக், 37.
“சிங்கப்பூர் அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களின் நலன்கருதி பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
“குறிப்பாக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படை சுகாதாரப் பராமரிப்புத் திட்டம் (Primary Care Plan) உள்பட ஏனைய மருத்துவ வசதிகளும் மருத்துவ நிலையங்களும் காப்புறுதி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்த விழிப்புணர்வையும் வெளிநாட்டு ஊழியர்கள் பெற வேண்டும்,” என்றும் கூறினார் தொண்டூழிய நிறுவனத்துடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொண்டூழிய மருத்துவராகவும் பணிபுரியும் இவர்.
உடல்நலத்தோடு மனநலனிலும் ஊழியர்கள் அக்கறை செலுத்த வேண்டும். மன அழுத்தம், மனச் சோர்வு, மன இறுக்கம், அதீத பதற்றம் போன்ற மனநலத்தைப் பாதிக்கும் எவ்வித அறிகுறி தென்பட்டாலும் தக்க மருத்துவ ஆலோசனை பெறுதல் மிகவும் அவசியம் என்றும் டாக்டர் ஹமீத் ரசாக் வலி யுறுத்தினார்.
அடிப்படை சுகாதாரத் திட்டம்
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடப்புக்கு வந்துள்ள ‘பிசிபி’ என்ற அடிப்படை சுகாதாரத் திட்டத்தின் கீழ், முதலாளிகள் தங்குவிடுதிகளில் வசிக்கும் அல்லது கட்டுமானம், கடல்துறை, செயல்முறைப் பொறியியல் ஆகிய துறைகளில் பணியாற்றும் தங்களுடைய ஊழியர்களுக்கான பராமரிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதியின் ஒரு பகுதியாக இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவுகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் பெரும்பாலான அடிப்படைச் சுகாதாரத் தேவைகளுக்கு ஆகும் செலவுகளை இந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
வேலை அனுமதி விண்ணப்பம் அல்லது புதுப்பித்தலின்போது மருத்துவப் பரிசோதனை பெறலாம்.
கடுமையான, நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம்.
ஆண்டுதோறும் முழு உடல் அடிப்படை சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
தொலைபேசி அல்லது இணையம் வழி மருத்துவ ஆலோசனை வசதியும் தங்குமிடத்திற்கு மருந்தை அனுப்பி வைக்கும் வசதியும் உண்டு.
தங்குவிடுதிகளிலிருந்து மனிதவள அமைச்சின் மருத்துவ மையங்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளது.
மருத்துவ மையங்களில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஊழியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நிபுணத்துவ மருத்துவ ஆலோசனை பெறும் நோயாளிகளுக்கு இச்சலுகை அளிக்கப்படாது.
தேவை ஏற்பட்டால் மருத்துவ அவசர ஊர்தி அல்லது மற்ற மருத்துவ போக்குவரத்து சேவைஅளிக்கப்படும். இத்திட்டத்தின் மருத்துவ சேவைகளைப் பெற ஊழியர்கள் மனிதவள அமைச்சின் கீழுள்ள அனைத்து மருத்துவ நிலையங்களையும் அணுகலாம். ஒவ்வொரு மருத்துவப் பரிசோதனைக்கும் ஊழியர் $5 கட்டணம் செலுத்த வேண்டும்.
தொலைபேசி அல்லது இணையம் வழி மருத்துவ ஆலோசனைக்கு $2 வெள்ளி மட்டுமே. இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.mom.gov.sg/primary-healthcare-system/primary-care-plan இணையதள முகவரியை நாடலாம்.
நலமிக்க வாழ்க்கை முறை: இன்று இலவச உரை நிகழ்ச்சி
இந்து அறக்கட்டளை வாரியமும் மீடியாகார்ப் ஒளி 96.8 நிறுவனமும் இணைந்து நலமிக்க வாழ்க்கை முறை பற்றி விளக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இன்று காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஸ்ரீிநிவாசப் பெருமாள் கோயில், பிஜிபி அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.
நலமிக்க வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் போன்றவை பற்றி இந்நிகழ்வில் கலந்துரையாடப்படும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம்.
பல்வேறு சமூக அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் இது போன்ற பல சமூக நிகழ்வுகளை அவ்வப்போது நிகழ்த்தி வருகின்றன. வெளிநாட்டு ஊழியர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு பயன்பெறலாம்.