உலகின் மிகச் சிறந்த காற்பந்து விளையாட்டாளர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் பெலே காலமானதை அடுத்து, அவருக்கு உலகம் முழுவதுமிலிருந்தும் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
மூன்று முறை உலகக் காற்பந்துக் கிண்ணத்தை வென்ற ஒரே காற்பந்து வீரர் பெலே ஆவார்.
82 வயது பெலே, பெருங்குடல் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். பிரேசிலின் சாவ் பாவ்லோ மருத்துவமனையில் அவர் மூச்சுப் பிரச்சினையின் காரணமாக நவம்பர் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
"உங்களால்தான் நாங்கள் இப்போது இப்படி இருக்கிறோம். நாங்கள் உங்கள் மீது எல்லையற்ற அன்பு வைத்திருக்கிறோம். அமைதியாக இளைப்பாறுங்கள்," என்று அவரது மகள் கெலி நாசிமெண்டோ தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
பெலேயின் மரணத்தைத் தொடர்ந்து பிரேசிலில் மூன்று நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் தற்போதைய அதிபர் பொல்சொனாரோ, பெலே “சிறந்த குடிமகன் என்றும் சென்ற இடம் எல்லாம் அவர் பிரேசிலுக்கு மேலும் சிறப்பு சேர்த்தார்.” என்றும் புகழாரம் சூட்டினார்.
பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மெக்ரோன் பெலேயின் பெயர் என்றுமே நீடிக்கும் என்றார். “அது விளையாட்டு. அவர் அரசன். முடிவில்லாதது.” என்று திரு மெக்ரோன் டுவிட்டரில் பதிவிட்டார்.
காற்பந்து உலகத்தின் புகழஞ்சலி
கிறிஸ்டியானோ ரொனால்டோ, “அழிவில்லாத அரசரான பெலேக்கு வெறும் பிரியாவிடை சொல்வது மூலம் மட்டும் காற்பந்து உலகம் தற்போது உணரும் வலியை வருணித்துவிட முடியாது. பல மில்லியன் பேருக்கு அவர் உத்வேகம் அளித்தார்.” என்று இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
ஆர்ஜன்டினாவின் லயனல் மெஸ்ஸியும் பெலேவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மான்சஸ்டர் சிட்டிக்காக ஆடும் நார்வேயைச் சேர்ந்த காற்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட், “ஒரு விளையாட்டு வீரர் நிகழ்த்தி நீங்கள் பார்க்கும் அனைத்தையுமே பெலேதான் முதலில் செய்தார்,” என்று குறிப்பிட்டார்.
பெலேக்கு முன்னர் 10 என்பது வெறும் எண்தான் என்று தான் எங்கேயோ படித்ததை பிரேசில் காற்பந்து வீரரான நெய்மார் நினைவுகூர்ந்தார்.
“பெலேதான் அனைத்தையும் மாற்றினார் காற்பந்தைக் கலையாக, பொழுதுபோக்காக அவர் மாற்றினார். ஏழைகளுக்கும் கறுப்பினத்தவருக்கும் அவர் குரல் கொடுத்தார். பிரேசிலை மற்றவர்கள் கவனிக்க வைத்தார்,” என்று நெய்மார் பதிவிட்டார்.
காற்பந்து ரசிகர்கள் பலரும் பெலேக்கு சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.