இங்கிலாந்துக்கு 1966ல் உலகக் கிண்ணம் கிடைத்ததுபோல், பிரான்சுக்கு 1998ல் உலகக் கிண்ண வெற்றியாளர் விருது கிடைத்ததுபோல் போர்ச்சுகல்லுக்கு 2004ஆம் ஆண்டின் ஐரோப்பிய கிண்ண வெற்றியாளர் விருது கிடைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிறைவேறாமல் கிரீஸ், போர்ச்சுகலை இறுதிப் போட்டியில் வென்ற நிலையில் அன்று மைதானத்தில் செய்வதறியாது கண்களில் நீர் வழிந்தபடி நின்றிருந்தார் போர்ச்சுகீசிய வீரரும் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரருமான கிரிஸ்டியானோ ரொனால்டோ.
இவர் கடந்த நான்கு ஆட்டங்களில் கோல் எதுவும் போடாமல் இருந்ததால் மட்டுமே இவர் காற்பந்து உலகில் மங்கிவிட்டாரோ என்ற எண்ணம் பலரது மனதில் எட்டிப் பார்க்கும் நிலையில் நேற்று அதிகாலை நடந்த நட்புமுறை காற்பந்தாட்டம் ஒன்றில் பெல்ஜியத்துக்கு எதிராக இவர் ஒரு கோல் போட்டு அந்நாட்டை 2-=1 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடிக்க உதவியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் இவர் வெளிப்படுத்திய அற்புதத் திறன், கோல் போட வேண்டும் என்ற இவரது துடிப்பு அனைத்துக்கும் இவருக்கு கிடைத்த அந்த ஒரு கோலுக்கு சமமாகாது என்று கூறுகின்றனர் காற்பந்து ரசிகர்கள். இவரைப் போலவே போர்ச்சுகலின் தங்கத் தலைமுறையினர் என்று கொண்டாடப்படும் இன்றைய காற்பந்து அணியின் மற்றொரு வீரரான லுயிஸ் நானி பெல்ஜியத்துக்கு எதிரான இன்னொரு கோலை போட்டார்.
பிரான்சில் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள ஐரோப்பிய கிண்ண காற்பந்து போட்டியே போர்ச்சுகல் வெற்றியாளர் விருதை வெல்லக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு என்று பலரால் கருதப்படுகிறது. 1966ஆம் ஆண்டிலிருந்து கடைசி எட்டு நாடுகள் பங்கேற்கும் இறுதிச் சுற்றுவரை சென்றுள்ளது போர்ச்சுகல். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணக் காற்பந்து அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி கோல்களில் மயிரிழையில் ஸ்பெயின் நாட்டிடம் தோற்றது போர்ச்சுகல்.
பெல்ஜிய வீரரிடம் இருந்து பந்தைத் தட்டிப் பறிக்கப் போராடும் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி