குன்ஷன்: உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. பெண்கள் அணிகளுக்கான இந்தப் போட்டியில் இந்திய அணி நேற்று முன்தினம் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முடிவில் இந்திய அணி 3-1 என தாய்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 12-21, 19-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக வெற்றியாளர் ராட்சானோக்கிடம் தோல்வி கண்டார்.
மற்ற ஒற்றையர் ஆட்டங்களில் பி.வி.சிந்து, ருத்விகா ஷிவானி காதே ஆகியோர் வெற்றி பெற்றனர். இதுபோல், இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா=அஸ்வினி ஜோடியும் வெற்றி பெற்றது. அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.