முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 10,000க்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இது, 2014ஆம் ஆண்டில் நடந்த முந்தைய தேசிய விளையாட்டுப் போட்டிகளைவிட 20% அதிகம்.
இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதன்முறையாக உடற்குறையுள்ளோருக்கான பாரா விளையாட்டுப் போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சில போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமையே தொடங்குகின்றன.
மொத்தம் 21 விளையாட்டுகளில் 488 போட்டிகள் நடைபெறவுள்ளன. சிங்கப்பூர் முழுவதும் 15 இடங்களில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டிகளில் 28வது தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 8வது ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் வென்ற விளையாட்டாளர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகளைக் காண அனுமதி இலவசம்.