ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனிரோவில் கத்தி முனையில் மிரட்டி தங்களிடமிருந்த விலைமதிப்புமிக்க பொருட்களைப் பறித்துச் சென்றதாக தங்கப் பதக்கம் வென்ற ரையன் லோக்டே உள்ளிட்ட நான்கு அமெரிக்க நீச்சல் வீரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவர்கள் மாற்றி மாற்றிக் கூறியதால் அவர்களில் மூவர் அமெரிக்கா புறப் படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு விசா ரணைக்காக அழைத்துச் செல்லப் பட்டனர். கடந்த ஞாயிறன்று அதிகாலை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் லோக்டே, ஜேம்ஸ் ஃபெய்ன் ஆகிய இருவரிடம் விசா ரணை நடத்துவதற்கு ஏதுவாக அவர் களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யும்படி பிரேசில் நீதிபதி ஒருவர் போலிசாருக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
ஆனால், 32 வயதான லோக்டே திங்கட்கிழமையன்றே அமெரிக்கா திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஃபெய்ன், குன்னார் பென்ட்ஸ், ஜேக் காங்கர் ஆகிய மற்ற மூன்று நீச்சல் வீரர்களும் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரேசில் போலிஸ் வட்டாரங்கள் கூறின. பென்ட்ஸ், காங்கர் ஆகியோர் தங்களது விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதை அமெரிக்க ஒலிம்பிக் குழு பேச்சாளரும் உறுதி செய்தார். விமானத்தில் ஏறுமுன் ஃபெய்னும் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு மற்ற இருவருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பிரேசில் போலிசார் தெரிவித்தனர். அம்மூவரும் எந்தக் குற்றச்சாட்டுகளையும் எதிர் நோக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
அமெரிக்கா செல்லவிருந்த விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ரியோ டி ஜெனிரோ விமான நிலைய காவல் நிலையத்தில் விசாரணையை முடித்து விட்டு வெளியே வரும் அமெரிக்க நீச்சல் வீரர்கள் குன்னார் பென்ட்ஸ் (இடது), ஜேக் காங்கர் (நடுவில்). படம்: ஏஎஃப்பி