தமிழவேல்
கிரிக்கெட் என்றாலே வெட்ட வெளியில் வெயிலில் விளையாடும் ஒன்று என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் உள்ளரங்கு கிரிக்கெட் தற்போது பிரபலமாகி வந்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வகை கிரிக்கெட் சிங்கப்பூரில் விளையாடப்பட்டு வந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இது கிரிக்கெட் பிரியர்களிடையே ஆர்வத்தை ஈர்த்து உள்ளது.
இடப்பற்றாக்குறை மிக்க சிங்கப்பூரில் மிகச் சில திடல்களே கிரிக்கெட் விளையாட்டுக்கு உகந்ததாக அமை கின்றன. மேலும் உள்ளரங்கில் விளை யாடப்படுவதால் வெயில், மழை என்று பார்க்கத் தேவையில்லை. ஒவ்வோர் அணியிலும் 8 பேர் என நீள் சதுர உள்ளரங்கில் இரு பந்தடிப்பாளர்கள் இருப்பார்கள். வழக்கமாக 16 ஓவர்களில் ஓர் இன்னிங்ஸ் (ஒரு பாதி) எனும் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் முழு ஆட்டத்தையும் முடித்துவிடலாம்.
இந்த வகை கிரிக்கெட்டுக்கு இங்கு ஆர்வம் அதிகரிக்க அதற்குப் பிரத்தி யேகமாக ஓர் ஆடுகளம் தேவை என விளையாட்டாளர்கள் எண்ணினர். அதன் பொருட்டு ஒரு சிறப்பு அரங்கையும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுவினர். இந்நிலையில் 12 பேர் சுயமாக ஓர் இடத்தைப் பிடித்து கிட்டத்தட்ட $200,000 செலவில் உலகத் தரம் வாய்ந்த ஓர் உள்ளரங்கு கிரிக்கெட் அரங்கை டர்ஃப் சிட்டியில் நிறுவினர். தற்போது இந்த வகை கிரிக்கெட்டுக்கு இங்கு ஒரு லீக் போட்டியும் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் அரங்கை நிறுவியவர்களில் திரு முரளிதரன் கோவிந்தராஜனும் ஒருவர்.
"உள்ளரங்கு கிரிக்கெட் சிங்கப்பூரின் சூழலுக்கு மிகவும் ஏற்றதொரு பொழுது போக்கு நடவடிக்கை. ஒன்றரை மணி நேரமே எடுக்கும் இந்த விளையாட்டு ஒரு சிறந்த உடற்பயிற்சி. சிறாருக்கு மிகவும் பிடித்த ஒர் விளையாட்டும்கூட. மழையோ, வெயிலோ, விளையாட்டுத் தடைபடாமல் நடைபெறலாம். பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகளுக்கு உகந்த ஒரு நடவடிக்கை.
இந்த வகை கிரிக்கெட் ஆட்டத்தில் உபயோகப்படுத்தும் பந்து சற்று மிருதுவாக இருப்பதால் சிறுவர்களுக்கு அடிபடும் அபாயம் இல்லை. பள்ளியின் உள்ளரங்கு களில் மிக எளிதாக இவ்விளையாட்டை நடத்தலாம்," என்றார் டிபிஎஸ் வங்கியில் துணைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் திரு முரளிதரன். இன்னும் சில வாரங்களில் சிங்கப்பூர் உள்ளரங்கு கிரிக்கெட் அணி உலக அரங்கில் தனது பெயரை நிலைநாட்ட இங்கிலாந்து புறப்படவுள்ளது.
உள்ளரங்கு கிரிக்கெட்டில் அடுத்த இலக்கை எட்டும் வகையில் வரும் அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாஸ்டர்ஸ் உலகக் கிண்ண உள்ளரங்கு கிரிக்கெட் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து திரு முரளியும் அவரது சகாக்களும் விளையாடவுள்ளனர். அதே போல 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடையிலான பிரிவிலும் ஒரு சிங்கப்பூர் குழு விளையாடவுள்ளது.
சிங்கப்பூர் உள்ளரங்கு கிரிக்கெட் அரங்கில் விளையாடும் வீரர்கள். படம்: முரளிதரன் கோவிந்தராஜன்