ஷாங்காய்: உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் நோவாக் ஜோகோவிச் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றைக் கைப்பற்றி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஆனால் காலிறுதிச் சுற்றை வெல்ல அவர் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. தரவரிசையில் 110வது இடத்தில் உள்ள ஜெர்மன் வீரர் மிஷ்கா சுவேரேவுடன் மோதிய ஜோகோவிச் யாரும் எதிர்பாராத வகையில் 3=6 எனும் புள்ளிக் கணக்கில் முதல் செட்டை இழந்தார்.
இரண்டாவது செட்டில் ஜோகோவிச் எப்படியும் வென்றுவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு சுவேரேவின் அதிரடி ஆட்டம் பீதியை ஏற்படுத்தியது. 6-6 எனும் புள்ளிக் கணக்கில் இரண்டாவது செட் சமநிலையை எட்டியது. இரண்டாவது செட்டை சுவேரேவ் வென்றால் ஜோகோவிச்சின் கிண்ணப் பயணம் ஒரு முடிவுக்கு வரும் என்ற யதார்த்த நிலை அச்சுறுத்தியது. ஆனால் ஒருவழியாகச் சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் இரண்டாவது செட்டை 7=6 எனும் புள்ளிக் கணக்கில் வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் 6=3 எனும் புள்ளிக் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.