லிவர்பூல்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவைவிட லிவர்பூல் வலிமைமிக்கது என்பதை நிரூபிக்கும் நோக்குடன் களமிறங்கவேண்டும் எனத் தமது ஆட்டக்காரர்களிடம் விலர்பூலின் நிர்வாகி யர்கன் கிளோப் கேட்டுக்கொண்டுள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது சொந்த விளையாட்டரங்கமான ஆன்ஃபீல்ட்டில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடன் லிவர்பூல் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் கடுமையான போட்டி நிலவும் என்றும் ஆட்டம் விறுவிறுப்பானதாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. "இம்மாதிரியான ஆட்டத்தில் கள மிறங்கும் வீரர்களுக்கு மற்றவர்கள் உற்சாக மளிக்கவேண்டிய அவசியம் ஏற்படக்கூடாது. அவர்களுக்குச் சொந்தமாகவே அந்த முனைப்பு இருக்கவேண்டும்.
"இதைப் போன்ற முக்கிய ஆட்டங்களைப் புறக்கணிக்கக்கூடாது. கவனத்தை ஈர்க்கும் இதைப் போன்ற ஆட்டங்களுக்கு வீரர்கள் எப்போதும் தயாராக இருக்கவேண்டும்," என்று கிளோப் தெரிவித்தார். யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி லீக் பட்டத்தைக் கைப்பற்ற தாங்கள் தகுதி உடையவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டும் என கிளோப் விருப்பம் தெரிவித்துள்ளார். லிவர்பூல் அணி அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர இலக்கு கொண்டுள்ளது. அதற்கு நேர்மாறாக மூன்று ஆட்டங்களில் யுனைடெட் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து பிறகு ஆகக் கடைசியாக விளையாடிய லீக் ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டியுடன் அது 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. இருப்பினும், யுனைடெட்டை குறைவாக எடைபோட்டுவிடக் கூடாது என்று கிளோப் எச்சரித்துள்ளார். யுனைடெட், கண் சிமிட்டும் நேரத்தில் வெற்றியைப் பறிக்கும் திறனைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
சொந்த மண்ணில் யுனைடெட்டை வீழ்த்தி வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்ய தமது வீரர்களுக்கு இலக்கு வகுத்திருக்கும் லிவர்பூல் நிர்வாகி கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்