இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் ரவிச்சந்திரன் நேற்று கண்தானம் செய்துள்ளார். உலகின் மிகச் சிறந்த 'ஆல்=ரவுண்டராக' திகழும் அவர் கடந்த ஆண்டின் சிறந்த ஐசிசி வீரர் விருதுக்குத் தேர்வானார். சிறந்த டெஸ்ட் வீரர், ஆண்டின் சிறந்த வீரர் என இரண்டு ஐசிசி விருதுகளுக்கு அவர் தேர்வுச் செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ்நாட்டின் ராஜன் கண் மருத்துவமனையில் நடந்த கண்தான விழிப்புணர்வு பிரசாரத்தில் அவர் பங்கேற்று தனது கண்களைத் தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். "நான் என் கண்களைத் தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள்," என்று அஸ்வின் தனது விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ரசிகர்களிடம் வற்புறுத்தி உள்ளார். ஏற்கெனவே அவர் 100 விழுக்காடு வாக்குப் பதிவுக்கான தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் முன்னதாக ஈடுபட்டு இருந்தார். "கண்தானம் செய்வது என்பது எனது மனைவி பிரித்தியின் கனவு. எனது ரசிகர்களும் இதைப் பின்பற்றி கண்தானம் செய்வார்கள் என்று நம்புகிறேன். இதில் உள்ள திருப்தி வேறு எதிலும் இல்லை. ஒவ்வொரு குடிமகனும் இதை பின்பற்ற வேண்டும்," என்றார் அஸ்வின்.
கண்தான உத்தரவில் கையெழுத்திட்ட அஸ்வின் (இடமிருந்து மூன்றாவது). படம்: டுவிட்டர்