மான்செஸ்டர்: பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஒன்றை மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு அறிமுகப் படுத்தியுள்ளது. அக்குழுவின் முன்னாள் இளையர் பயிற்றுவிப்பாளரான பேரி பென்னலால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் கைகொடுக்கும். குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களைத் தொடுத்த பென்னலுக்குக் கடந்த ஆண்டு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல, இன்னொரு முன்னாள் இளையர் பயிற்றுவிப்பாளரான ஜான் புரூமும் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப் படுத்தியதை சிட்டியின் தன்னிச்சையான விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.
அவரால் பாதிக்கப்பட்டோரும் புதிய திட்டத்தின்கீழ் இழப்பீடு பெறத் தகுதி பெறுவர். 1964 முதல் 1971 வரை சிட்டி குழுவில் பணியாற்றிய புரூம் கடந்த 2010ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இழப்பீடாக எவ்வளவு தொகை வழங்கப்படும் என்ற விவரத்தை சிட்டி குழு அறிவிக்கவில்லை. ஆயினும், பல மில்லியன் பவுண்டு தொகையை இழப்பீட்டிற்காக அக்குழு ஒதுக்கியுள்ளதாக பிபிசி செய்தி கூறுகிறது. கடுமையாகப் பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடாக ஆறு இலக்கத் தொகை வழங்கப் படும் எனக் கூறப்படுகிறது.