சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 7 லீக் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் 5 போட்டிகள் முடிந்து விட்டன. 6வது ஐ.பி.எல். லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நாளை நடைபெறுகிறது.
இதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. ஆகக் குறைந்த கட்டணம் ரூ.1300. இந்த நுழைவுச்சீட்டை வாங்குவதற்கு நேற்று அதிகாலையில் இருந்து ரசிகர்கள் திரண்டு வரத் தொடங்கினர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களிடையே நெரிசல் ஏற்படாமல் இருக்க சவுக்குக் கட்டைகள் மூலம் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் நுழைவுச் சீட்டு வாங்குவதற்கு ஒருவரையொருவர் முண்டியடித்தனர். இதில் தடுப்புக் கட்டைகள் முறிந்து விழுந்தன. இதனால் ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தள்ளிவிட்டனர்.
ஒரு கட்டத்தில் காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் தடியைக் கொண்டு ரசிகர்களின் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஆனாலும் கூட்டம் கலைய வில்லை.
இதற்கிடையில் சாலையிலும் ஏராளமானவர்கள் திரண்டு நின்றதால் போக்குவரத்துக்கும் இடை யூறு ஏற்பட்டது.
அவர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் கலையவில்லை. இதையடுத்து காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
இதனால் சேப்பாக்கம் விளையாட்டு மைதானப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போக்குவரத்துச் சீரானது.