புதுடெல்லி: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்குப் பின் மிகப் பெரிய விவாதமாக இருப்பது டோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பதுதான்.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் டோனி இடம்பெறவில்லை.
அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டங்களிலும் டோனி இடம்பெற வில்லை.
ஓய்வு முடிவு குறித்து இதுவரை தம்மிடம் டோனி எதுவும் கூறவில்லை என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஒருமுறை தெரிவித்தார்.
தாம் ஓய்வு பெற வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள் என டோனியே ஒருமுறை வெளிப்படையாக கூறியிருந்தார்.
ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011ஆம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கௌரவம் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக ராணுவ பணிகளில் ஈடுபட்டார்.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை காஷ்மீரில் உள்ள 106 டிஏ பட்டாலியன் அணியில் சேர்ந்து டோனி சுற்றுக்காவலில் ஈடுபட்டார்.
இந்நிலையில், டோனியின் ஓய்வைப் பற்றி அவரே முடிவு எடுப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவான் தெரிவித்துள்ளார்.
“டோனி நீண்டகாலமாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார், அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். இது அவருடைய முடிவாக இருக்க வேண்டும்.
“அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணிக்காக இன்றியமையாத தருணங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார்.
“நேரம் வரும்போது அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று நான் நம்புகிறேன். அணியின் ஒவ்வொரு வீரரின் திறனையும் மேம்படுத்துவதில் டோனியைவிட சிறந்தவர்கள் யாரும் இல்லை. அவர் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்,” என தவான் கூறினார்.