டாக்கா: ஒருவழியாக பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்க இணங்கியுள்ள நிலையில், அவ்வணியின் விக்கெட் காப்பாளர் முஷ்ஃபிகுர் ரஹீம் ஒருவர் திடீரென தம்மால் பாகிஸ்தானுக்கு வர முடியாது எனக் கூறி, அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்தத் தகவலை உறுதிசெய்த பங்ளாதேஷ் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் மினாஜுல் அபிதின், “பாகிஸ்தானுக்கு வர இயலாது எனத் தொலைபேசி வழியாக முஷ்ஃபிகுர் என்னிடம் தெரிவித்தார். அவரது அதிகாரபூர்வ கடிதத்திற்காகக் காத்திருக்கிறோம். அது கிடைத்துவிட்டால், அவரை அணியிலிருந்து விடுவித்துவிடுவோம்,” என்றார்.
ஈராண்டு தடை காரணமாக ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இல்லாத நிலையில் முஷ்ஃபிகுரும் விலகியிருப்பது பங்ளாதேஷ் அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பாகிஸ்தான் உடனான டி20 தொடரில் விளையாடவுள்ள பங்ளாதேஷ் அணி விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
லாகூரில் 2009ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, மற்ற நாட்டு அணிகள் அங்கு செல்ல மறுத்தன. இந்நிலையில், கடந்த ஈராண்டுகளில் ஸிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் அங்கு சென்று விளையாடியதையடுத்து, அந்நாடு அனைத்துலக கிரிக்கெட்டுக்குப் படிப்படியாகத் திரும்புகிறது.
இம்மாதம் 24-27 தேதிகளில் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக பங்ளாதேஷ் அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது. அதன்பின் பிப்ரவரியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக அங்கு செல்லும். பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் முடிந்தபிறகு ஒரேயொரு ஒருநாள் போட்டி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக மூன்றாம் முறையாக பங்ளாதேஷ் அணி அங்கு செல்லும்.