லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் செல்சியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் அணி அடுத்த பருவத்து சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை வலுப்படுத்திக்கொண்டு இருக்கிறது.
மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிராக செல்சி நேற்று தடுமாறிய போதிலும் இதில் காணொளி உதவி நடுவர் முறையில் அமைந்த சில முடிவுகளும் அந்தத் தோல்விக்கு வழிவகுத்ததாக பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் தறுவாயிலும் பின்னர் 66ஆம் நிமிடத்திலும் யுனைடெட் வீரர்கள் தலையால் முட்டி இரு கோல்கள் போட, செல்சி 0-2 என்ற கோல் கணக்கில் சொந்த மைதானத்தில் தோற்றது.
இதில் முதல் கோலை, அதுவரை பெரிதாக ஒன்றும் செய்யாமல் இருந்த ஆண்டனி மார்சியால், ஏரோன் வான் பிசாக்கா கொடுத்த பந்தை, தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள, இரண்டாவது கோலை யுனைடெட் கேப்டன் மெக்வாயர், புதுவரவான புருனோ ஃபெர்னாண்டஸ் கொடுத்த பந்தை அதேபோல் தலையால் முட்டி கோலாக்கினார்.
இதைத் தொடர்ந்து, லீக் பட்டியலில் நான்காம் நிலையிலுள்ள செல்சிக்கும் யுனைடெட்டுக்குமான புள்ளிகள் வித்தியாசம் மூன்றாகக் குறைந்துள்ளளது.
ஆட்டத்தின் முதல் பாதியில் கேப்டன் மெக்வாயர், செல்சி வீரர் பட்சுவாயியின் தொைடயில் உதைத்ததற்கு அவருக்குச் சிவப்பு அட்டை காண்பித்து ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என செல்சி வீரர்களும் ரசிகர்களும் கூக்குரலிட, காணொளி உதவி நடுவர் முறையில் அதைப் பரிசீலனை செய்த நடுவர் குழு செல்சியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
பின்னர், செல்சியின் கர்ட் சூமா போட்ட கோலும் செல்சி வீரரான அஸ்பிலிகுவெட்டா யுனைடெட் வீரர் பிரண்டன் வில்லியம்சை தள்ளிவிட்டார் என்று கூறி, நிராகரிக்கப்பட்டது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஆட்டத்தின் 76ஆம் நிமிடத்தில் செல்சியின் ஒலிவியே ஜிரூ போட்ட கோலும், அவர் ‘ஆஃப்சைட்’ நிலையில் இருந்தார் எனக் கூறி, நிராகரிக்கப் பட்டது.
நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அபாரமாக விளையாடவில்லை என்றபோதிலும் கிடைத்த வாய்ப்புகளை அது நன்கு பயன்படுத்திக்கொண்டது என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தத் திறன் செல்சியிடம் இல்லாமல் போயிற்று என்றும் அவர்கள் கூறுகின்றனர். யுனைடெட் வீரர்களில் நீண்டகாலமாக காயம் காரணமாக விளையாடாதிருந்த எரிக் பயி ஆட்டநாயகனாக விளங்கினார் என்கிறது பிபிசி.