மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொண்ட அந்த விளையாட்டில் பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்தடித்தது.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஸ்மித் 31 ஓட்டங்களிலும் லபுஷேன் 67 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்ற ஸ்மித் சதம் கடந்து அசத்தினார்.
கடைசி வரை களத்தில் இருந்த ஸ்மித், 131 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 105.4 ஓவர்களில் 338 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சைத் தொடங்கியது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷுப்மன் கில் களமிறங்கி நிதானமாக விளையாடினர்.
இந்திய அணி தரப்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகள், சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் 16வது ஓவரில் லயன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்சர் அவருக்கு வரலாறு படைக்க உதவியது.
அனைத்துலகப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
அவர் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 63 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதுவே, 5 முறை உலக வெற்றியாளர் பட்டத்தைப் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் ஆகும்.
அவர் நேற்றைய ஆட்டத்தில் அடித்த சிக்சரால், மொத்த சிக்சர் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்து உள்ளது. கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். அவரது இந்த சிக்சருக்கு பின்னர், அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (534), பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி (476) ஆகியோர் ரோகித்துக்கு முன்னாள் அடுத்தடுத்து உள்ளனர்.