சிங்கப்பூர்: உலகக் கிண்ண காற்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டங்களில் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக பயிற்றுநர் தட்சுமா யோஷிடா தலைமையிலான சிங்கப்பூர் அணி கடந்த செவ்வாய்க்கிழமை துபாய் சென்று சேர்ந்தது. இதற்காக உள்ளூர் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தேசிய அணியின் கடைசி பயிற்சி ஆட்டம் கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.
இன்று துபாய் ஜேஏ விளையாட்டு மையத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடனான பயிற்சியில் சிங்கப்பூர் குழு ஈடுபடும். அங்குள்ள வெப்பநிலையை 37 டிகிரி செல்சியசை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வெப்பநிலையில் பயிற்சியில் ஈடுபடுவது அடுத்த வாரம் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் விளையாட இவர்களுக்கு கைகொடுக்கும்.
காரணம் அங்கு வெப்பநிலை அடுத்த வாரம் 40 டிகிரி செல்சியசை நெருங்கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ளது.
லயன்ஸ் குழு நாளை ஞாயிற்றுக்கிழமை ரியாத் செல்கிறது. குரூப் 'டி' யில் இடம்பெற்றுள்ள பாலஸ்தீன அணியுடன் ஜூன் 4ஆம் தேதி லயன்ஸ் மோதும். அடுத்தபடியாக உஸ்பெகிஸ்தானுடன் ஜூன் 8ஆம் தேதியும் சவூதி அரேபிய அணியுடன் ஜூன் 12ஆம் தேதியும் இக்குழு விளையாடும்.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவலுக்குப் பின்னர் முதன்முறையாக லயன்ஸ் குழு வெளிநாட்டில் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகிறது.
சிங்கப்பூர் இளையர் குழுவில் ஆடி வந்த இல்ஹான் ஃபாண்டி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறார். தேசிய அணியில் விளையாட வேண்டும் என்ற தமது கனவு நிறைவேறி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவருடைய சகோதரர்கள் இக்ஸான் ஃபாண்டி, இர்ஃபான் ஃபாண்டி ஆகியோரும் இதே குழுவில் உள்ளனர்.
அதிக வெப்பநிலை குறித்து லயன்ஸ் கோல் காப்பாளர் ஹசன் சன்னி கூறுகையில், "இங்குள்ள வெப்பநிலையை மட்டுமின்றி எல்லாவித அம்சங்களையும் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது. எங்களுக்கு ஏற்றவாறு வெப்பநிலையைச் சரிசெய்துகொள்ள சில போட்டிகள் உதவின.
"கடினமாக இருந்தபோதிலும் ஒவ்வொரு வீரரும் எதனையும் சந்திக்கும் மனநிலையில் உள்ளனர்," என்றார்.
வெப்பநிலையைச் சமாளிப்பது ஒருபக்கம் இருப்பினும் பயணம் தொடர்பான கொவிட்-19 கட்டுப்பாடுகளும் அணிக்குச் சவாலாக இருந்து வருகிறது.
குறிப்பாக, வெளிநாட்டுப் பயணங்களின்போது ஓர் அறையில் இரு வீரர்கள் தங்குவது வழக்கம். அணியின் உத்தி குறித்து கலந்து பேச அது உதவியாக இருக்கும்.
தற்போது அப்படி இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் தங்குவதால் உணவு வேளையின்போதும் பயிற்சி ஆட்டங்களின்போதும் மட்டுமே சந்தித்துக்கொள்ளும் நிைல ஏற்பட்டு உள்ளது.
40 டிகிரி வெப்பநிலை; கொள்ளைநோய் கட்டுப்பாடுகள்