துபாய்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து, அடுத்த சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் சுற்றின் கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக இன்று வியாழக்கிழமை நடந்த ஆட்டத்திலும் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமாகத் தோற்றுப்போனது.
முதலில் பந்தடித்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் டு பிளஸ்ஸியை (76 ஓட்டங்கள்) தவிர வேறு எவரும் பொறுப்புடன் விளையாடவில்லை. இதனால், 20 ஓவர் முடிவில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
கட்டாய வெற்றியை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றிபெற்றது. அந்த அணியின் தலைவரும் தொடக்கப் பந்தடிப்பாளருமான லோகேஷ் ராகுல் 42 பந்துகளில் 98 ஓட்டங்களை விளாசி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருப்பினும், பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களைப் பொறுத்தே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் அணி எது என்பது உறுதியாகும்.
டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய அணிகள் ஏற்கெனவே ‘பிளே ஆஃப்’ சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டன.