விலாரியால் (ஸ்பெயின்): துணிச்சலான முடிவுகளை எடுத்து பிரச்சினையில் மூழ்கிக்கிடந்த இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட்டை மீண்டும் வெற்றிபெறச் செய்துள்ளார் இதன் தற்காலிக நிர்வாகியான மைக்கல் கேரிக். யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஸ்பெயினின் விலாரியாலை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றது யுனைடெட். கிரிஸ்டியானோ ரொனால்டோ, ஜேடன் சாஞ்சோ ஆகியோர் கோல்களைப் போட்டனர். முதன்முறையாக யுனைடெட்டிற்குக் கோல் போட்டுள்ளார் இவ்வணியில் புதிதாகச் சேர்ந்துள்ள இங்கிலாந்து நட்சத்திரம் சாஞ்சோ. "ஜேடனை (சாஞ்சோ) நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார் கேரிக். "மிகவும் கடுமையாக உழைத்தார், என்னைப் பொறுத்தவரை இவ்வாட்டத்தில் தன்னால் முடிந்தவரை சிறப்பாக ஆடினார்," என்று கேரிக் குறிப்பிட்டார்.
மிகவும் மோசமாக விளையாடிவந்ததால் சில நாட்களுக்கு முன் யுனைடெட் நிர்வாகி ஒலே குனா சோல்ஷியா பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குத் துணை நிர்வாகியாக இருந்த மற்றொரு முன்னாள் யுனைடெட் வீரரான கேரிக் தற்காலிகமாக இப்பொறுப்பை வகிக்கிறார். நட்சத்திரம் புரூனோ ஃபெர்னாண்டஸை கேரிக் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து விளையாடவில்லை. இது, சோல்ஷியா அடிக்கடி செய்யாத ஒன்று. மேலும் இதுவரை அதிகம் விளையாடாதிருந்த ஆன்டனி மார்சியால் ஆட்டத்தைத் தொடங்கினார், பொதுவாக முன்னிலை ஆட்டக்காரராகக் களமிறங்கும் ரொனால்டோ இம்முறை திடலின் இடது புறத்தில் விளையாடினார். பிற்பாதியில் ஃபர்னாண்டெஸ் ஆட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.
குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் யுனைடெட்டிடம் மீண்டும் பழைய உத்வேகத்தை ஓரளவு காண முடிந்தது. "கடந்த இரண்டு நாட்கள் அணியில் இருக்கும் எல்லோருக்கும் வருத்தம் தரும் வகையில் அமைந்ததுடன் இந்த வெற்றியை சோல்ஷியாவிற்கு சமர்ப்பணம் செய்வது போன்ற ஓர் உணர்வு இருந்தது," என்று கேரிக் தனது முன்னாள் நிர்வாகியைக் கெளரவித்தார். மிகவும் சிக்கலான நிலைமையை நன்கு கையாண்டார் கேரிக்.
கடந்த சில வாரங்களாகத் தனது வலைக்குள் நீர் போல் கோல்களை ஓடவிட்ட யுனைடெட்டின் தற்காப்பு விளையாட்டாளர்கள் இவ்வாட்டத்தில் மிகுந்த கவனத்துடன் விளையாடி ஒரு கோலும் விழாமல் பார்த்துக்கொண்டனர்.