ஹனோய்: தென்கிழக்காசிய
விளையாட்டுகளுக்கான மேசைப்பந்துப் போட்டியில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் சிங்கப்பூர் தங்கம் வெல்லத் தவறியது.
2019ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில்
அப்பிரிவுகளில் சிங்கப்பூர் தங்கம் வென்றிருந்தது.
அதனால் இம்முறையும் அப்பிரிவுகளில் சிங்கப்பூர் அணி தங்கத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய இரண்டு சிங்கப்பூர் வீரர்களும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினர்.
கிளேரன்ஸ் சியூ, செங் ஜியான் ஆகியோர் நேற்று நடைபெற்ற
அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியின் பிடியில் சிக்கினர்.
சொந்த மண்ணில் முனைப்
புடன் விளையாடிய வியட்னாமிய வீரரிடம் சிங்கப்பூரின் கிளேரன்ஸ் சியூ தோற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனையிடம் செங் ஜியான் தோல்வியைத் தழுவினார்.
இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் மேசைப்பந்துக் குழு இரண்டு தங்கப் பதக்கங்கள், மூன்று
வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றுடன் நாடு திரும்புகிறது.
ஆண், பெண் ஒற்றையர் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வெல்லும் இலக்குடன் இருந்த சிங்கப்பூர் குழுவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும் மற்ற பிரிவுகளில் அது பதக்கங்களை அள்ளி பெருமிதம் அடைந்துள்ளது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் கிளேரன்ஸ் சியூ, ஈத்தன் போ ஜோடி தங்கம் வென்றது.
மூன்றாவது முறையாக இப்பிரிவில் அவர்கள் தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கலப்பு இரட்டையர் பிரிவில் சிங்கப்பூருக்கு தங்கமும் வெள்ளியும் கிடைத்தன.
சிங்கப்பூரின் மகளிர் மேசைப்பந்து அணி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய செங் ஜியான் வெண்கலம் வென்றார்.