கிரிக்கெட்: தினேஷ் கார்த்திக் அதிரடியில் இந்தியா எளிதாக வெற்றி
ராஜ்கோட்: தினேஷ் கார்த்திக்கின் அதிரடிப் பந்தடிப்பும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டன.
இதனையடுத்து, தொடர் 2-2 எனச் சமநிலை கண்டது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை முடிவுசெய்யும் ஐந்தாவது, கடைசிப் போட்டி இன்றிரவு பெங்களூரில் இடம்பெறுகிறது.
முதலிரு போட்டிகளைத் தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரைத் தன்வயப்படுத்த முடியும் என்ற நெருக்கடி இந்திய அணிக்கு. இத்தகைய சூழலில், மூன்றாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டும் யுஸ்வேந்திர சகலும் கைகொடுக்க, இந்திய அணி தொடரில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
இந்நிலையில், ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த நான்காவது போட்டியில் பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீசியது.
இதனையடுத்து, ருதுராஜும் இஷான் கிஷனும் இந்திய அணியின் தொடக்கப் பந்தடிப்பாளர்களாகக் களமிறங்கினர். முந்திய போட்டியில் அரைசதம் விளாசிய ருதுராஜ் இம்முறை ஐந்து ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் நான்கு ஓட்டங்களுடன் மனநிறைவு அடைந்து, ஓய்வறை திரும்பினார்.
அணித்தலைவர் ரிஷப் பன்ட் 17 ஓட்டங்களிலும் இஷான் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 81 ஓட்டங்களுக்கு நால்வரைப் பறிகொடுத்துத் தத்தளித்தது. இந்த நிலையில் ஹார்திக் பாண்டியாவுடன் மூத்த ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் இணைய, கடைசி ஐந்து ஓவர்களில் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது.
ஹார்திக் 31 பந்துகளில் 46 ஓட்டங்களைக் குவித்தார். கார்த்திக் 27 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசினார். இதுவே, அனைத்துலக டி20 போட்டிகளில் அவருக்கு முதல் அரைசதம். இறுதியில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைச் சேர்த்தது.
இரண்டாவதாகப் பந்தடித்த தென்னாப்பிரிக்கா அணி மளமள வென விக்கெட்டுகளை இழந்தது. அணித்தலைவர் டெம்பா பவுமா, ஆவேஷ் கான் பந்துவீச்சில் காயம் அடைந்து வெளியேறினார். இறுதியில் அவ்வணி 87 ஓட்டங்களை மட்டுமே எடுத்து, 82 ஓட்ட வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது.
டி20 போட்டிகளில் அவ்வணியின் ஆகக் குறைவான ஓட்ட எண்ணிக்கை இதுதான்.
ஆவேஷ் எதிரணியின் நான்கு ஆட்டக்காரர்களை வெளியேற்றினார். கார்த்திக் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு
இந்நிலையில், ஹார்திக், கார்த்திக் என நடுவரிசைப் பந்தடிப்பாளர்களும் ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சகல் எனப் பந்துவீச்சாளர்களும் சிறந்த ஆட்டத்திறனுடன் இருப்பதால் இன்றைய கடைசிப் போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது. இன்று இரவு 9.30 மணிக்குப் போட்டி தொடங்கும்.