சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2022 - உடன் இணைந்து, ஆர்யா கிரியேஷன்ஸ் தமிழ்ப் புத்தக நிலையத்தின் ஆதரவில் 5/11/22 அன்று 'பாப்பாப் பாட்டு' நூல்கள் வெளியீடு கண்டன. மழலையருக்கான நூல்களின் தேவை அதிகரித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது பண்பாட்டு விழுமியங்களையும், நம் நாட்டின் சூழலுக்கேற்ப எளிமையான நடையில் சிறுவர்களைக் கவரும் வடிவில் படைத்திருக்கிறார் கவிஞர் இராம வயிரவன். தேசிய கலைகள் மன்றத்தின், 'தி புளூ' அறையில் காலை 11.30 மணிக்கு, திருமதி சுந்தரி சாத்தப்பன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார்.
ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முருகவேல் இலக்கியா, சஞ்சனா செந்தில்வேல் மற்றும் சச்சின் ஆதித் ஆகியோர், தொகுதி ஒன்றின் நூல் அறிமுகத்தை, தாத்தா தன் பேத்திகளுக்கு, நூலில் இடம்பெற்ற பாடல்களை விளக்குவதாக, குறுநாடக வடிவில் படைத்தது பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தது. தொடக்கநிலை மாணவர்கள் ஸ்ருதி சாத்தப்பன், சக்தி நாச்சியப்பன் மற்றும் ஷ்ராதா ஆகியோர் தொகுதி இரண்டில் இடம்பெற்ற பாடல்களில் தங்களுக்குப் பிடித்த பாடல்களை, ராகத்தோடு பாடி அசத்தினார்கள்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ள பாடல்களை வலியுறுத்தும் வகையில் ஒரு காட்சியை அமைத்து, அதைத் தன் மகன் அர்ஜுன் ஆனந்துடன் சிறப்பாக நடித்தும் காட்டினார் எழுத்தாளர் சங்கீதா கந்தசாமி.
ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல் நூலை வெளியிட்டார். பெரியவர்களின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் நவீனமும் புதுமையும் கலந்து பாடல்களுக்கான படங்களை வரைந்து தந்த ஓவியர் திருமதி ராஜ்ஸ்ரீ விஜயன், முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.
தனது ஏற்புரையில், இந்த நூலின் தயாரிப்புக்கு முக்கிய காரணம் நோய்த்தொற்றுக் காலத்தில் தன்னுடைய பேத்திக்கு நூல்களை வாசித்துக் காட்டும் ஆர்வத்தில் நூலகத்திற்குச் சென்று மழலையருக்கான நூல்களை இரவல் பெற்று வந்ததாகவும், அப்போது சிங்கப்பூர் சூழலில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் மிகக் குறைவாக இருப்பதைத் தான் உணர்ந்ததாகவும் தானே குழந்தைகளுக்கான நூல்களை ஏன் தயாரிக்கக்கூடாது என்று தோன்றியதன் விளைவாக 'பாப்பாப் பாட்டு' நூல்கள் உருவானது என்றார் நூலாசிரியர் திரு இராம வயிரவன். நிகழ்ச்சியை செவ்வனே நெறிப்படுத்தினார் திருமதி பிரதீபா வீரபாண்டியன்.
"பாலர் பள்ளி மாணவர்களுக்காக உள்ளூர் சூழலில் எழுதப்பட்ட நூல்கள் இருக்கின்றனவா எனத்தேடும், பாலர் பள்ளி ஆசிரியர்கள் பலரின் தேடலுக்கான விடையாக மலர்ந்திருக்கின்றன 'பாப்பாப் பாட்டு' நூல்கள்.
"இத்தகைய நூல்கள் இன்னும் பல எழுதப்பட வேண்டும்," என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆர்யா கிரியேஷன்ஸ் நிறுவனர் திருமதி பிரேமா மகாலிங்கம் கூறினார்.
செய்தி, படம்: ஆர்யா கிரியேஷன்ஸ்