நோம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடந்த முறை இழந்த தங்கத்தை இம்முறை வென்றே தீரவேண்டும் என்னும் தீரா வேட்கையோடு விளையாடி வருகிறது சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழு.
நேற்று நடைபெற்ற தொடர் சுழல்சுற்றில் இந்தோனீசியாவை 12-5 என்னும் கோல் கணக்கில் சிங்கப்பூர் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தங்கப் பதக்கத்தை நோக்கி ஒரு படி அது முன்னேறி உள்ளது.
கம்போடியாவின் நோம்பென் நகரிலுள்ள தேசிய ஒலிம்பிக் நீச்சல் மையத்தில் நடைபெற்றப் போட்டியின் முதல் சுற்றில் இந்தோனீசியா 3-2 என்று முன்னிலை பெற்றிருந்தது.
இருப்பினும், அடுத்த சுற்றில் சிங்கப்பூர் வீரர்கள் மின்னல் வேகத்தில் இரண்டு கோல்களைப் போட்டு இந்தோனீசியாவை அதிர்ச்சியடைய வைத்தனர்.
4-2 என்னும் முன்னிலையைத் தொடர்ந்த சிங்கப்பூர் அணி மூன்றாவது சுற்றில் 8-4 என்று முன்னேற்றம் கண்டது.
அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான லீ காய் யாங் இந்தோனீசியாவின் பல கோல் முயற்சிகளைத் தடுத்ததன் மூலம் சிங்கப்பூர் அணியினரின் உற்சாகம் கூடியது.
இறுதியில் 12-5 என்னும் கோல் கணக்கில் சிங்கப்பூர் வென்றது. இது இந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழுவின் மூன்றாவது வெற்றி. தாய்லாந்தை 12-7 என்னும் கோல் கணக்கிலும் மலேசியாவை 14-1 என்னும் கோல் கணக்கிலும் சிங்கப்பூர் ஏற்கெனவே வென்றுள்ளது.
இனி பிலிப்பீன்சையும் போட்டிகளை ஏற்று நடத்தும் கம்போடியாவையும் சிங்கப்பூர் சந்திக்கும்.
சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழு தென்கிழக்காசியப் போட்டிகளில் 27 முறை தொடர்ந்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்து வந்தது.
ஆனாலும், 2019ல் பிலிப்பீன்சில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக சிங்கப்பூர் குழு இந்தோனீசியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்து வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பியது.
2022 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நீர்ப்பந்து இடம்பெறவில்லை.
நேற்று இந்தோனீசியாவைப் பழிதீர்த்த கையோடு, பறிகொடுத்த தங்கத்தை அடைந்தே தீரவேண்டும் என்று முனைப்பில் உள்ளது சிங்கப்பூர் குழு.