இர்ஷாத் முஹம்மது
அடையாளம் என்பது ஒருவர் பேசும் மொழி, அவரது பண்பாடு, அவர் கொண்டுள்ள விழுமியங்கள் என்றும் அவையே மனிதனை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வேர்கள் என்பதும் அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் பயிலும் தமிழ் விருப்பப்பாட மாணவர்களின் ஆணித்தரமான கருத்து.
"வேரில்லாத மரம் வீழ்ந்து
விடும். மரம் மண்ணில் உறுதியாக நிற்பதற்கு வேர் மண்ணுக்குள் ஆழமாகச் சென்று உறுதியாக இருப்பது அவசியம். மனிதன் வாழ்க்கையில் தழைத்தோங்க அவனது வேர்கள் ஆழமாக இருப்பது அவசியம்," என்றனர் அவர்கள்.
'தமிழ்த் திரையிசைப்பாடல்கள் வழி இலக்கியமும் வாழ்வியல் கருத்துகளும்' எனும் தலைப்பில் 'ஸூம்' மெய்நிகர் தளத்தில் சுவையான முத்தமிழ் நிகழ்ச்சியை நடத்தினர் அந்தத் தொடக்கக் கல்லூரி மாணவர்கள்.
தமிழ்மொழி விழாவின் புதிய பங்காளித்துவ அமைப்பாக இவ்வாண்டு இணைந்துள்ள அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி, கடந்த மாதம் 24ஆம் தேதி இயல், இசை, நாடக அங்கங்களுடன் இலக்கிய நிகழ்ச்சியை இணைய மேடையில் ஏற்றியது.
கிட்டத்தட்ட 30 மாணவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கதாகாலட்சேபம், வில்லுப்பாட்டு, சிற்றுரை, நடனம், பாடல் எனப் பல அம்சங்கள் இடம்பெற்றன.
தமிழ்த் திரையிசைப்பாடல்களில் புதைந்துள்ள கருத்துகளை விளக்கங்களுடன் பகிர்ந்தனர் மாணவர்கள்.
பாலின சமத்துவம், உறவுகளின் முக்கியத்துவம், அன்பின் முக்கியத்துவம், இன நல்லிணக்கம், பிரச்சினைகளின் காரணங்களை ஆராய்ந்து தீர்வுகாண்பதன் அவசியம், இயற்கைப் பாதுகாப்பு, தன்னம்பிக்கை, ஆற்றல், மனதை நல்
வழிப்படுத்துவது முதலிய கருத்துகளுக்கு பல்வேறு பாடல்களை மாணவர்கள் மேற்கோள் காட்டினர். அந்தக் கருத்துகள் மூலம் ஒருவர் தங்களின் வாழ்க்கையை, வாழும் முறையை மேம்படுத்திக்கொள்வது குறித்தும் விளக்கமளித்தனர்.
தமிழ் மொழியின் பெருமையையும் அதைக் கட்டிக்காத்து பயன்
படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இலக்கிய படைப்புகளின் வழி ஆணித்தரமாக அவ்விளையர்கள் எடுத்துரைத்தனர்.
தமிழில் பேச முயற்சி செய்வோரைப் பாராட்ட வேண்டும்; ஊக்குவிக்க வேண்டும் என்றும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளும் அதேவேளையில் தாய்மொழியான தமிழ்மொழியைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் கருத்துரைத்தனர்.
"நம்ம மொழியில பேச பெருமைப்படணும். தமிழன்னா தலை நிமிர்ந்து நிக்கணும். தமிழ் இனிமையான மொழி. கம்பீரமான மொழி. காலத்திற்கேற்ப மாறும் மொழியும்கூட. மூத்த மொழி. பலராலும் போற்றப்படுகிறது. மாற்றங்களைக் கண்டிருந்தும் உயர்ந்து நிற்கிறது," என்பது போன்ற முத்தான கருத்துகளை அவர்கள் பகிர்ந்தனர்.
"நமது மொழியை நாம் கொண்டாடினால்தானே தொடர்ந்து அது வாழும். எப்படி தேடத்தேட பொருள் சேருமோ அதைப் போலத்தான் தமிழ் அறிவும். தேடணும், அப்போதுதான் தமிழைத் துய்ப்பது தொடர்பான தெளிவைப் பெற முடியும்," என்ற வசனத்தை கதாகாலட்சேப அங்கத்தில் குறிப்பிட்டனர் குரு, சிஷியர் 1, சிஷியர் 2 என வேடமிட்ட செல்வகுமார் சத்தியா ஸ்ரீ, திவ்யஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி, ருஃபைதா சையத் இப்ராஹிம்.
சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் விளக்கி, அந்தக் கருத்துகள் திரையிசைப்பாடல்களில் பயன்படுத்தப்பட்ட விதத்தை ரெத்தினம் ரெபேக்கா, ஸஹானா ஞானானந்தம், மோனிஷாசக்தி சண்முகசுந்தரம், அடைக்கப்பன் வள்ளியம்மை ஆகியோர் பாடிக் காட்டினர்.
சிற்றுரை அங்கத்தில் மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து போல வேடமிட்டு உரையாற்றினர் சரண்யா முசிலா, லாவண்யா கணேசன் கிருத்திக்கேஷ், வைஷ்ணவி ராமநாதன்.
ஒவ்வொரு சிற்றுரைக்குப் பின்னரும் அந்தந்த கவிஞர்கள் இயற்றிய பாடல் ஒன்றுக்கு நடனமாடினர் கிருஷ்மிதா ஷிவ் ராம், அய்யாகண்ணு அபிராமி, திவ்யஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி, ஸ்ருதிகா குமார், சுவப்ரியா சிதம்பரம் மற்றும் நந்தினி சிவக்குமார்.
'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு' எனும் கண்ணதாசனின் வரிகளுக்கான விளக்கத்தை வில்லுப்பாட்டு மூலம் பகிர்ந்தனர் சு. ஷண்மதி, அடைக்கப்பன் வள்ளியம்மை, நந்தினி சிவக்குமார், ஸஹானா ஞானானந்தம் மற்றும் கிருஷ்மிதா ஷிவ் ராம்.
மனம் இருந்தால் வழி உண்டு என்பதால் மனதை நல்வழிப்படுத்தி, எல்லோரும் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்று கண்ணதாசன் வழிகாட்டியுள்ளார் என்றும் தன்னம்பிக்கையையும் தைரியமும் கொண்டு மனிதன் வாழவேண்டும் என்றும் வில்லுப்பாட்டு மூலம் எடுத்துரைத்தனர் மாணவர்கள்.
ஒவ்வொரு காட்சிக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்புடைய உடைகளையும் அலங்காரத்தையும் சரிவர செய்திருந்தனர் தேசிகன் திப்தா, ஹரினி பவானந்தம், சுவப்ரியா சிதம்பரம், எம் ஆயிஷா ஷிஃபானா, ஜெனிஸ் ஷெரின் ஜோசஃப், செல்வகுமார் ஹனிஷா மற்றும் சீனிவாசன் சிவ ரஞ்சனா.
மேடை நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகித்தனர் சங்கீதா செல்வராஜு, பாலமுருகன் விஷ்வா, தேவேந்திரன் ராமசந்திரன், முஹம்மது ஷரிஃப் உமர், அஷ்வின் செந்தில்வேலன்.
சிவகுமார் அரவிந்த், அஜெய் கார்த்திக் பாலசுப்ரமணியன், லாவண்யா கணேசன் கிருத்திக்கேஷ், ரெத்தினம் ரெபேக்கா, தம்பட் சமர்த் ஷிவானந்த், ட்ரிஸ்டன் ஆகியோர் காணொளியை சிறப்பாகத் தயாரித்து, விளம்பரப் பிரிவையும் பொறுப்பேற்று நடத்தினர். நிகழ்ச்சியை ஜோதி பாரதி நரேனும் சிவசண்முகப் பிரியாவும் வழிநடத்தினர்.
"நிகழ்ச்சியைப் படைக்கும்போதுதான் தமிழர்களின் பாரம்பரிய கலையான கதாகாலட்சேபத்தின்வழி மக்களுக்கு நல்ல செய்திகளைத் தெரிவிப்பது, ஒரு விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி அறிந்துகொண்டேன். கதாகாலட்சேபம் பற்றி இளையர்கள் பலருக்குத் தெரியாது. அவர்கள் நாங்கள் படைத்த நிகழ்ச்சியின்வழி பயனடைந்திருப்பர்," என்று ரெத்தினம் ரெபேக்கா சொன்னார்.
மாணவர்கள் குழுவாகச் செயல்பட்டு, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி இயங்கியது மிக்க மகிழ்ச்சி அளித்ததாகக் கூறினார் அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் தமிழாசிரியை திருவாட்டி கமலவாணி பாலையன்.
தமிழ்மொழியை வாழும் மொழியாக நிலைத்திருக்க இந்த நிகழ்ச்சி நல்ல தளமாக அமைந்தது. தமிழ் இலக்கியங்கள் மீதான புரிதலும் விருப்பமும் தமிழ்மொழி மீதான ஈடுபாடும் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. மாணவர்களே இந்த முயற்சியில் ஈடுபட்டதன் வழி, மொழியின் பயன்பாடும் விருப்பமும் மேன்மைபெற்றுள்ளது," என்று கூறினார் அந்தத் தொடக்கக் கல்லூரியின் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன்.
இந்த நிகழ்வின் காணொளியைக் காண கீழ்க்கண்ட 'கியூஆர்' குறியீட்டை வருடவும்: