"ஆளப் போறான் தமிழன் உலகம் எல்லாமே…"
"இந்த ஆரம்பம் புதுசு….வரலாறு பெருசு... எந்த மானுட குலமும்…எங்க புகழ தொட்டது கெடையாது..."
- என்பது போன்ற தமிழ்த் திரையிசைப் பாடல்கள் ஒலிக்க, இருவாரங்களுக்குக் களைகட்டியது தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியின் தாய்மொழி விழா.
சிங்கையில் தமிழ் மொழி மாத விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இம்மாதத்தில், எங்கள் கல்லூரியில் இருவார தாய்மொழி விழா கொண்டாடப்பட்டது.
'நமது இன மரபுடைமையை அரவணைப்போம்' என்ற கருப்பொருளில் அமைந்த இவ்வாண்டின் கொண்டாட்டத்தில், தமிழ் மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இவ்விழா தாய்மொழிகள் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டு
தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. தமிழ் மரபையும் பண்பாட்டையும் அரவணைப்பது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இவ்வாண்டு கிருமித்தொற்று காரணமாக கற்றல் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில், இந்திய மரபுடைமை நிலையம்,
இந்திய பாரம்பரிய கைவினைக் கலைகள் மற்றும் விளையாட்டுகள் பற்றிய கண்காட்சி கல்லூரிவளாகத்திலேயே சிறப்புற அமைக்கப்பட்டது.
எங்கள் பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி இந்தியர்களின் மரபையும் பண்பாட்டையும் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தது.
தமிழ் மொழி பேசும் மாணவர்கள் மட்டுமல்லாது மற்ற மாணவர்களும் அந்த இருமொழி கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
மொழி சார்ந்த புதிர்ப்போட்டிகள், பண்பாட்டுப் படைப்புகள் என்ற வரிசையில் AKT நிறுவனம் நடத்திய தமிழர் பாரம்பரிய கலைகள் பற்றிய பயிலரங்கு, நமது பாரம்பரியக் கலைகளின் அருமை பெருமைகளை எங்களுக்கு எடுத்
துரைத்தது.
இந்தக் கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக அமைந்தது நாங்கள் மேற்கொண்ட செயல்வழி விழுமிய நடவடிக்கை.
இம்மாதம் புத்தாண்டைக் கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 530 அன்பளிப்புப் பைகளை தயாரித்து அதில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை நாங்கள் அனுப்பிவைத்தோம்.
சிங்கப்பூருக்கு வந்து, தமது முன்னேற்றத்திற்கும் சிங்கையின் வளர்ச்சிக்கும் உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி கூறும் வகையில் அன்பளிப்புகளுடன் மாணவர்களே தயாரித்த வாழ்த்துச் செய்திகளையும் வண்ணச் சுவரொட்டிகளாக அச்சிட்டு அனுப்பினோம்.
இந்த அன்பளிப்புகளைப் பெற்றதும் ஊழியர்களின் முகத்தில் தெரிந்த புன்னகையே எங்களின் கடின உழைப்புக்கு வெகுமதியாக அமைந்தது.
மொத்தத்தில் இந்த இருவார தாய்மொழி விழா கொண்டாட்டம், தமிழ் மொழி, பண்பாடு, கலை, மரபு சார்ந்த பல அரிய செய்திகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளித்ததோடு தமிழ்ச் சமூகத்திற்கு எங்களால் முடிந்த சேவையை ஆற்றவும் வாய்ப்பளித்தது.
இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் அனுபவங்கள் மாணவர்களின் வாழ்வில் தமிழை வாழும் மொழியாக விளங்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.