கள்ள நோட்டு மற்றும் கள்ளத் துப்பாக்கிகளை வெளிநாட்டிலிருந்து மேற்கு வங்கத்துக்குக் கடத்திவந்து, அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேற்குவங்க மாநிலம் பீர்பூம் பகுதியைச் சேர்ந்த 26 வயது ஹசன்ஷேக்கும் அவரது நண்பரும் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
குற்றச்செயல் பற்றிய தகவல் அறிந்த கோல்கத்தா போலிஸ் படையினரும் மத்திய உளவுப் பிரிவினரும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்துள்ளனர். இந்நிலையில், ஹசன்ஷேக் என்பவரைத் தேடிவந்த காவல்துறையினர் அவர் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருப்பதாக அறிந்தனர்.
மத்திய உளவுப் பிரிவு ஆய்வாளர் இப்திகார் தலைமையில் சென்னை வந்த கோல்கத்தா போலிஸ் படையினர், அப்பகுதி காவல்துறையினருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு ஹசன்ஷேக் பதுங்கியிருந்த குடியிருப்புக்குள் நுழைந்து அவரைத் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
அவரது நண்பரான மற்றொருவரை அம்பத்தூரில் கைது செய்தனர்.
இருவரும் புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.