சென்னை: நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
புகார் விவரம்: நடிகை கஸ்தூரி, தன் முகநூல் பக்கத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த வி.சி.க, தலைவர் திருமாவளவனையும் அவரது சமூகத்தைச் சார்ந்த எங்களைப் போன்றவர்களையும் கோயில்களுக்குச் செல்வதைத் தடுக்கவேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இது, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களுக்கு எதிரான கருத்து. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலத் துணைச் செயலர் பேரா.முருகையன் தலைமையில் அக்கட்சி வழக்கறிஞர்கள் பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனைச் சந்தித்து, கஸ்தூரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு அளித்தனர்.