காஞ்சிபுரம்: கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிறது வெற்றி வேற்கை. பிச்சை எடுத்தாவது கல்வி கற்கலாம் என்பதே இதன் பொருள்.
ஆனால் இந்த எண்ணத்திற்கு மாறாக ஒரு தாய் தனது இரு குழந்தைகளைக் கல்வி கற்க விடாமல் பிச்சை எடுக்க வைத்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்களும் பொதுமக்களும் குரல் எழுப்பி உள்ளனர்.
விஞ்ஞானியாகவும் காவல்துறை யில் சேவையாற்ற வேண்டும் என்ற கனவுடனும் மிதக்கும் இரு சிறுவர்கள் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வருகின்றனர். இந்த அவல நிலைக்கு அரசு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் வசிக்கும் தாய் ஒருவர் கல்வி கற்க ஆசைப்படும் இரு குழந்தைகளையும் பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டு பிச்சை எடுக்க வைத்து வருகிறார்.
போதைக்கு அடிமையான அந்த தாயால் இரு குழந்தைகளும் தங்க ளது எதிர்காலத்தை தொலைத்து நிற்பதாகத் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தாயின் மதுப் பழக்கத்திற்காக விருப்பம் இல்லாமல் பிச்சை எடுத்துவரும் இரு சிறுவர்க ளையும் மீட்டு, நல்ல கல்வி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை அறிந்த சார் ஆட்சியர் சரவணன், காமாட்சி அம்மன் கோயில் வாசலில் தங்கியிருக்கும் இரு சிறுவர்களையும் மீட்டு, அவர்க ளுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இரு சிறுவர்களையும் பெற்ற தாயே கைவிட்ட நிலையில், அவர்களை நன்றாக படிக்க வைத்து நாட்டிற்கு சேவையாற்றும் அளவுக்கு வளர்த்துவிடும் பொறுப்பை அரசே ஏற்கவேண்டும் என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது.