திருப்பூர்: கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கம் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதேபோல் மாநிலம் முழுவதும் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட வேண்டுமென பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூரில் உள்ள தென்னாம்பாளையம் பகுதியில் நடைபெறும் காய்கறிச் சந்தைக்கு நூற்றுக்கணக்கானோர் வருகை புரிவது வழக்கம். விவசாயிகள், காய்கறி சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்வதை அடுத்து அங்கு நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் காய்கறிச் சந்தைக்கு வரும் அனைவரும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு சுரங்கம் போன்ற அமைப்பின் உள்ளே நுழைந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அந்தச் சுரங்கத்துக்குள் செல்பவர்கள் மீது சுமார் 5 விநாடிக்கு உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 16 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட இந்தச் சுரங்கப் பாதையை அமைக்க ஒரு லட்சம் ரூபாய் செலவானதாக அதை வடிவமைத்த தன்னார்வலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
“கொரோனா கிருமித் தொற்று தாக்குதலை உலக நாடுகள் எப்படிச் சமாளிக்கின்றன என்பதை இணையம் வழி கவனித்தபோது துருக்கி நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இத்தகைய கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
“எனவே, அதேபோன்று திருப்பூரிலும் சுரங்கம் அமைக்க முடிவு செய்தோம்,” என்கிறார் வெங்கடேஷ்.
பொதுமக்கள் காய்கறிச் சந்தைக்குள் நுழையும்போது இந்தச் சுரங்கத்துக்குள் கைகளைத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும்.
அப்போது 5 விநாடிகளுக்கு அவர்கள் மீது மழைச்சாரல் போல் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படும்.
இதேபோன்று சந்தையின் வெளிப்பகுதியிலும் சுரங்கம் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.