மதுரை: சென்னையைப் போலவே நமது மாவட்டத்திலும் கொரோனா கிருமிப் பரவல் அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ள மதுரை மக்களுக்கு, பெரும் நிம்மதி தரும் வகையில் அங்கு மருத்துவம் படித்த இரு ஐஏஎஸ் அதிகாரிகள் இணைந்து களமிறங்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பின் திடீர் வேகம் மதுரை மாவட்ட மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் 500க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் மதுரையில் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டங்களுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை கொரோனா பொறுப்பு அலுவலராக மாநில அரசு நியமித்து உள்ளது.
தற்போது மதுரை மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் ஒரு மருத்துவர். மதுரை ஆட்சியர் வினயும் ஒரு மருத்துவர்.
இந்த தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “மதுரையில் தொற்றின் வேகம் தீவிரமாகியுள்ளது. சென்னையை விட மதுரை கடுமை யாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சென்னையில் அரசு சார்பில் பெரிய, பெரிய வசதியுள்ள மருத்துவமனைகள் உள்ளன. இங்கு ஒன்றுதான் உள்ளது. மதுரை மட்டுமின்றி பக்கத்தில் உள்ள ஆறு மாவட்டங்களும் இந்த மருத்துவமனையைத்தான் நம்பியுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை சென்னை போன்று தினமும் ஆயிரம் ஆயிரமாக அதிகரித்தால் என்ன செய்வது எனத் தெரியாமல் கலங்கிப் போய் உள்ளோம். மக்கள் இனியும் அலட்சியம் காட்டினால் பேராபத்தில் தான் முடியும்,” என்றார்.