மதுரை: சிறையில், தந்தை மகன் இருவரையும் அடித்துத் தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாட்டுமக்களை மட்டுமின்றி அனைத்துலக மக்களின் மனசாட்சி யையும் அசைத்துப் பார்த்துள்ளது சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் உயிரிழப்பு.
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பி. என். பிரகாஷ், புகழேந்தி அடங்கிய அமர்வு கூடியது.
அப்போது அரசுத் தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்ல பாண்டியன், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். சிபிஐ அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் மாஜிஸ்திரேட்டிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில், “பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் வழக்கு சிபிஐ விசா ரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினார். நீதி வழங்கும் அரசியல் துணிவு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலாவ முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், மரணம் அடைந்த சாத்தான்குளம் வர்த்தகர்களான தந்தை-மகனுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது பிறந்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிபிஐ விசாரணையைவிட சிறப்புப் புலனாய்வுக்குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
தந்தை, மகன் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.