ராணிப்பேட்டை: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறன்றும் எந்த ஒரு தளர்வும் இல்லாத ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ராணிப்பேட்டையில் அசைவப் பிரியர்கள் மீன் வாங்க கூட்டமாகத் திரண்டனர்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது.
இருப்பினும் பெரும்பாலான மக்கள் இந்த உத்தரவை மீறும் வகையில் நடந்து கொண்டனர்.
ஆற்காட்டை அடுத்த முப்பது வெட்டி கிராமத்தில் சாலையோரத்தில் விற்பனை செய்த மீனை முகக்கவசம் அணியாமல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வாங்கிச் செல்ல குவிந்த மக்களால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், நேற்று சென்னை காசிமேடு பகுதியில் சாலையில் அமைக்கப்பட்ட மீன்கடைகள், திருவொற்றியூரில் உள்ள காய்கறி, மீன் சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அத்துடன், சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.