பெங்களூரு: தமிழகத்தை அடுத்து இதர தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதையடுத்து தென் மாநிலங்களில் கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
அண்மைய சில தினங்களாக கர்நாடகாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து சிறப்பு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாரம் பெங்களூருவில் தினமும் 2 லட்சம் பேருக்கு கிருமித்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடாகி உள்ளது.
கர்நாடகாவில் இதுவரை சுமார் 1.25 லட்சம் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் மட்டும் சுமார் 49 ஆயிரம் பேருக்கு பாதிப்புள்ளது.
இந்நகரில் மட்டும் தினமும் குறைந்தபட்சம் 2 ஆயிரம் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கிருமிப்பரவல் உச்சத்தை அடையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து தினமும் இரண்டு லட்சம் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்த பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே ஆந்திராவில் சனிக்கிழமையன்று புதிதாக 9,276 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.50 லட்சமாகவும் மொத்த உயிரிழப்பு 1,407ஆகவும் அதிகரித்துள்ளது.
கேரளாவில் புதிதாக 1,129 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,742 ஆனது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.