சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும் பிரபல தொழி லதிபருமான வசந்தகுமாருக்கு (படம்) கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வசந்தகுமாரின் மனைவியும் இதே மருத்துவமனையில் கிருமித் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கெனவே எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என 32 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு எம்பி பாதிக்கப்பட்டு உள்ளது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.