சேலம்: சேலத்தில் கட்டப்படும் உலகின் உயரமான முருகன் சிலை வரும் தைப்பூச நாளன்று திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முருகன் சிலையின் கட்டு மானப் பணிகள் 90 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளன.
இந்தச் சிலை, வழிப்பாட்டிற்காக தைப்பூசத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று நிறுவனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புத்திர கவுண்டன் பாளையத்தில் சிலை அமைக்கப்பட்டு வருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலைக் கோயில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜன் கோயில் கலைஞர்கள்தான் இப்போது அதைவிட உயரமான முருகன் சிலையை சேலத்தில் வடிவமைத்து வருகின்றனர்.
இந்தச் சிலையின் உயரம் 146 அடி. மலேசியாவில் உள்ள முருகன் சிலையைவிட ஆறு அடி உயரமானது.
முருக பக்தரான ஸ்ரீதர், முருகப் பக்தர்கள் அனைவரும் வழிபடுவதற்காக பெரிய முருகன் சிலை எழுப்ப வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்த சிலைக்கு அருகே பெரிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.
சிலை திறக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட மண்டபத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் ஸ்ரீதர் மேற்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.
“முருகன் சிலையைச் சாதனைக்காக கட்டவில்லை. முருக பக்தர்களை திருப்திப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டேன்.
கட்சிப் பாகுபாடின்றி ஆன்மிகத்தின் அடிப்படையில் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறோம்,” என்று ஸ்ரீதர் கூறியுள்ளார்.
முருகன் சிலையின் கட்டுமானப் பணிகளை 2016ல் ஸ்ரீதரின் தந்தை முத்து நடராஜன்தான் தொடங்கிவைத்தார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு பிற்பகுதி யில் சிலை முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.