ஊட்டிக்கு அருகில் கொரோனா தொற்று பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாதிரிகளை சாலையோரத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, ஊட்டியிலுள்ள ஒரு கொரோனா சிகிச்சை மைய வளாகத்தில் வீசப்பட்ட மருத்துவக் கழிவுகளை குரங்குகள் வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது குறிப்பிடத்தகக்து.
நீலகிரியில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 4,500 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஆனால், கொரோனா மருத்துவக் கழிவுகளைக் கையாள்வதில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் அலட்சியப்போக்குடன் இருப்பதாக மக்கள், தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், கொரோனா பரிசோதனை மாதிரிகள் கூடலூர் நகரின் மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதியில் சாலையோரத்தில் கிடப்பதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் அவற்றை சுகாதாரப் பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.