சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்றும் அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் விஜயகாந்த். இதையடுத்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
எனினும் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொண்ட அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கிருமி தொற்றியது. அவரும் பின்னர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கடந்த 2ஆம் தேதி வீடு திரும்பிய விஜயகாந்த், திடீரென மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் தகவல்களைப் பரப்பினர்.
இந்நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வீண் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“சீரான, திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கதிரியக்க மதிப்பீடு செய்யப்பட்டது. விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார்,” என அம்மருத்துவமனை நிர்வாகம் மேலும் கூறியுள்ளது.
அண்மைக் காலமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார் விஜயகாந்த்.
இந்நிலையில் தேமுதிகவின் 14வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14ம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார்.