தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட ரூ.2650 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக உட்பட எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் ஒப்பந்தங்களை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள மகத்தான தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
“தொடர்ந்து நடத்திவரும் ஊழல் நிர்வாகத்தின் ஒரு கட்டமாக, பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி, தனது கைப்பாவைகளாக மாவட்ட ஆட்சியர்களை ஆக்கி, கொள்ளையடிக்க நினைத்த ஊழல் அரசின் தலையில் ஓங்கி வைக்கப்பட்டுள்ள சரியான குட்டு,” என்றும் அவர் தெரிவித்தார்
இதே தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள டிடிவி தினகரன் எம்எல்ஏ, அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்த வேண்டும் என்றார்.
“அரியர்ஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விவகாரங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் சொன்னார்.
திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த ஜோதிமணி குமரேசன், திருவண்ணாமலை மாவட்டம் தேவநத்தம் ஊராட்சித் தலைவா் ரமேஷ், தருமபுரி மாவட்டம் பொன்னேரி ஊராட்சித் தலைவா் அழகுராஜா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
“சாலைகள் அமைக்க ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் தேவை. ஆனால் ரூ.2,369.86 கோடி மதிப்பிலான இந்த சாலை அமைக்கும் திட்டங்களை தங்களுக்கு வேண்டியவா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமான இந்த சாலை அமைக்கும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்,” என்று மனுவில் ஊராட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், ரூ.2,369.86 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
“இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த ஆவணங்களைப் பார்க்கையில் ஒப்பந்தப் புள்ளி விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டு நிதிக்கான காசோலையில் கையொப்பம் இடும்போது மட்டும் அவா்களுக்கு விவரம் தெரிவிக்கப்படுகிறது.
“இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் திட்டங்களுக்கு எதிரானது,” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.