சென்னை: ராகவேந்திரா மண்டபத் திற்கான சொத்துவரியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அதற்கான சொத்து வரி ரூ. 6.5 லட்சத்தை அவர் மாநகராட்சியிடம் செலுத்தியிருக்கிறார்.
முன்னதாக ராகவேந்திரா மண்டபத்திற்கான வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்திருந்த ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்கப்போவதாகவும் நீதிபதி எச்சரித்ததால் மனுவை அவர் மீட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி நேற்று வரை வரி கட்ட காலக்கெடு விதித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று முழு வரித் தொகையையும் அவர் சென்னை மாநகராட்சிக்குச் செலுத்தியுள்ளார்.
இதற்கிடையே இந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
“அனுபவமே பாடம்” என்று அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவற்றைத் தவிர்த்திருக்கலாம்,” என்று திரு ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.