அன்புமணி ராமதாசுக்கு துணை முதல்வர் பதவியை அளிக்க முன்வரும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பது என பாமக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அன்புமணியை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள பாமக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுகவைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டுக்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. தேர்தல் ஆலோசகரை நியமித்ததுடன் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியையும் முடுக்கிவிட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் பட்சத்தில் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கவேண்டும் என்பதே திமுக தலைமையின் விருப்பம் என்று கூறப்படும் நிலையில், அக்கட்சியின் தேர்தல் பணிகளை கவனிக்கும் நிறுவனம் இந்த ஏற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கூட்டணி தொடர்பாக பாமக தரப்பில் இருந்து திமுகவுக்கு தூது அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது, திமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் பட்சத்தில் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் ஒரே நிபந்தனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
ஆனால், தேர்தலுக்கு முன்பே இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்வதில் திமுக தலைமைக்கு விருப்பமில்லை என்றும் அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சித் தத்துவம் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பதால் தேர்தலுக்கு முன்பே ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பவில்லை,” என திமுக தலைமை கூறியுள்ளது.
திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அறிவிக்கப்பட்டால் அது தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என அக்கட்சித் தலைமை கருதுகிறது,” என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேவேளையில் அதிமுகவுடனும் ரஜினி கட்சி தொடங்கினால் அவரிடமும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த பாமக தலைமை திட்டமிட்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
பாமகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக இரு கட்சிகளுமே விரும்புவதாகவும் இம்முறை கூட்டணியில் மட்டுமல்லாது ஆட்சியிலும் பங்குபெற பாமக விரும்புகிறது என்றும் அக்கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் பேராசிரியர் தீரன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை எந்தக் கட்சியுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெளிவுபடுத்தி உள்ளார்.
இதற்கிடையே திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் அன்புமணி, உதயநிதி ஆகிய இருவருமே துணை முதல்வர்கள் ஆக வாய்ப்புள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தேர்தல் நேரத்தில் வாரிசு அரசியலை முன்வைக்கக் கூடாது என திமுகவின் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தி இருப்பதாக தமிழக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.