தண்ணீர் தட்டுப் பாடு காரணமாக காலிக் குடங்களுடன் ஒருபக்கம் போராட்டம் நடத்திய நெல்லை மாவட்ட மக்கள், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக ஒரு நல்ல தீர்வை ஆட்சியர் காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மறுபக்கம், ஒவ்வோர் ஆண்டும் தண்ணீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் சென்னை மக்களுக்குத் தேவையான அளவில் தண்ணீர் இருப்பு உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் நல்ல செய்தி யைக் கூறியுள்ளனர்.
நெல்லை அருகே உள்ள சிதம்பர நகர்ப் பகுதியில் நெடு நாட்களாக குடிநீர்த் தட்டுப்பாட்டுப் பிரச்சினை நிலவி வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணும்படி திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணுவின் அலுவல கத்தை நேற்று நூற்றுக்கணக்கான பெண்களும் பொதுமக்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் தங்கள் கைகளில் காலிக்குடங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் ஏந்தியபடி தண்ணீர் கேட்டு முழக்கமிட்டனர்.
அதன்பின்னர், ஆட்சியர் அலு வலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனுவைப் போடும் பெட்டியில் மக்கள் பலரும் தங்களது மனுக்களைப் போட்டுச்சென்றனர்.
அவர்களில் சிலர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், “சிதம்பர நகர்ப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல்வேறு தெருக்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்வாய்களும் முறையாகப் பராமரிக்கப்படாமல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
“எங்கள் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க ஆட்சியர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கிடையே, சென்னை ஏரிகளில் தற்போது 7.1 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளதால் கோடைக் காலத்திலும்கூட இனி குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. இந்த நான்கு ஏரிகளிலும் 11.2 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இருமடங்கு தண்ணீா் இருப்பதால் சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய முடியும்.
அத்துடன், வடகிழக்குப் பருவமழை கைகொடுக்கும் என்பதால் வரும் கோடைக்காலத்திலும் சென்னையில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.