நாமக்கல்லில் ஆளும் அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர் பழனிசாமி, “ஏழை, எளிய மக்களைக் காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.
அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் சூடு பறக்கும் தேர்தல் பிரசாரம் களை கட்டத் தொடங்கி உள்ளது.
அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அதிமுக, திமுக, மநீம உள்ளிட்ட கட்சிகள் ஒன்றை ஒன்று சாடி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தனது முதற்கட்ட பிரசாரத்தை ஆரம்பித்த முதல்வர், நேற்று நாமக்கல் மக்களுக்கு புத்தாண்டு, தைப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுகவும் தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில் மக்கள் நீதி மய்யமும் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் முதல்வரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
முதல்வரின் மூன்று நாள் தொடரும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் கூறுகையில், “நாமக்கல் மாவட்டம் தனக்கு ராசியான மாவட்டம்,” என்றவர், “பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு.
“பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மலிவு விலைக் கடை பணியாளர்கள் மூலம் ரூ.2,500 வழங்கப்படுகிறது,” என்றார்.
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது. கூட்டணி அமைச்ச ரவையை தமிழக மக்களாலும் அதிமுகவினராலும் ஏற்கமுடியாது,” என்று கூறி பாஜகவின் பேச்சுகளுக்கு முதல்வர் பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்தார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிமுக ஒரு ஊழல் கட்சி என்று விமர்சித்துள்ள நிலையில், தேர்தலின்போது பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுகவை விமர்சிக்கலாமா என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.
அதிமுக மீது குற்றம் சுமத்தும் துரைமுருகன் தனது சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா என வினவிய முதல்வர், தான் வெளி யிடத் தயார் எனவும் கூறியுள்ளார்.
“திமுகவில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு தலைவராக என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டுள்ள முதல்வர், திமுக கட்சி அல்ல. அது ஒரு வர்த்தக நிறுவனம்,” எனவும் விமர்சித்தார்.
நடிகர் கமல்ஹாசன் 70 வயது வரை நடித்துவிட்டு ஓய்வு பெறும் வயதில் அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறிய முதல்வர், “கமல் நடிப்பில் வேண்டுமானால் நாயகனாக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவர் பூஜ்ஜியம்தான்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.