தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைப் போன்று தேனி மாவட்டத்தில் பன்றிபிடி போட்டி நடந்துள்ளது.
காளைகளுக்கு மாற்றாக பன்றிகளைக் களத்தில் இறக்கி விட்டு போட்டியில் ஆர்வம் காட்டி உள்ளனர் இளைஞர்கள்.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது குறமகள் வள்ளிநகர் குடியிருப்பு. இங்குதான் கழிவுகளிலும் அழுக்குகளிலும் புரண்டு திரியும் பன்றிகளைக் கட்டித் தழுவும் வினோத பன்றிபிடி போட்டி நடந்துள்ளது.
இப்போட்டி குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், “உழவுத் தொழிலுக்கு காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால், சங்ககாலத்தில் விவசாய உழவுக்கு காளைகளுக்கு முன்னர் பன்றிகள்தான் பயன்படுத்தப்பட்டன.
“இதற்கான ஆதாரம் புறநானூற்றின் பாடாண் திணையில் உள்ளது. இதனை மையமாக வைத்துதான் பன்றிபிடி போட்டியை நடத்தினோம்,” என்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியைப் போலவே இதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. சுமார் 70 முதல் 100 கிலோ எடைகொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள தகுதி உடையவை.
வாடிவாசல் போலவே, ஆரம்பக்கோட்டில் இருந்து அவிழ்த்துவிடப்படும் பன்றியை எல்லைக்கோட்டை நெருங்காத வண்ணம், அதன் பின்னங்காலை மட்டுமே பிடிக்கவேண்டும்.
சுமார் 80 கிலோவுக்கு மேல் இருக்கும் பன்றியின் பின்னங்காலைப் பிடித்தால், அது பிடிப்போரையும் சேர்த்து இழுத்துச் செல்லும். அதனையும் மீறி பன்றியைப் பிடித்து நிறுத்துபவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்பட்டு பரிசளிக்கப்படுகிறார்கள்.