வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின் என்றும் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
மூன்று நாள் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழகம் வந்த ராகுல், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இறுதி நாளான திங்கட்கிழமை (நேற்று முன்தினம்) கரூரில் பிரசாரம் செய்த பின்னர் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அவர்.
அப்போது, “திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம். காங்கிரஸ்-திமுக உறவு வலுவாக உள்ளது. திமுகவுடன் நல்லுறவு தொடர்கிறது,” என்றார். மேலும், மு.க.ஸ்டாலின் மீதும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீதும் தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் ராகுல் கூறினார்.
இந்நிலையில், ராகுலின் அறிவிப்பை வரவேற்று திமுக தலைமை டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்,” என ராகுல் பேசிய செய்தியை அந்த டுவிட்டரில் திமுக இணைத்துள்ளது. இருதரப்பிலும் நிகழ்ந்துள்ள சம்பவங்களால் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளதாகத் தெரிகிறது.