சென்னை: தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்காக கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 165,814.52 கோடி ரூபாய் வட்டியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2020-21ஆம் நிதியாண்டில் செலுத்தவேண்டிய வட்டித் தொகை 36,311.47 கோடி ரூபாய் என்றும் இதில் கடந்த நவம்பர் வரை ரூ.14,181.51 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் கடன் மற்றும் வட்டி நிலவரம் குறித்து மத்திய தலைமை நிதித் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாக மதுரை மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் வரவு, செலவு விவரங்களைப் பார்த்தபோது கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாக அந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
செலுத்த வேண்டிய வட்டித் தொகையே பல ஆயிரம் கோடிகளாக இருக்கிறது என்றால் வாங்கிய கடன் தொகை எவ்வளவு இருக்கும் எனும் மலைப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
"தமிழக அரசு பல்வேறு காரணங்களுக்காக வாங்கியுள்ள கடன்களுக்குத் செலுத்த வேண்டிய வட்டித்தொகை 2020-21ஆம் நிதியாண்டில் 278 விழுக்காடு உயர்ந்துள்ளது. அரசு பெறும் கடன்களுக்கு குறைந்த அளவு வட்டியே வசூலிக்கப்பட்டாலும் இந்த அளவிலான வட்டித்தொகை அதிர்ச்சி தருகிறது.
"வரும் மார்ச் மாதத்துக்குள் தமிழக அரசு நடப்பு நிதியாண்டுக்கான வட்டித்தொகையில் மீதமுள்ள ரூ.22,129 கோடியைச் செலுத்தவேண்டி உள்ளது என்று ஹக்கீம் சுட்டிக் காட்டியுள்ளார்.
பல்வேறு கடன்களுக்காக அரசு செலுத்தியுள்ள வட்டித் தொகையை வைத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.73,972 வழங்கியிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், திட்டங்களுக்குச் செலவு செய்வதை விட வட்டித் தொகைக்குத்தான் அரசு அதிகம் செலவிடுகிறது என்று கூறியுள்ளார்.
"2019-20 நிதியாண்டில் தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.20,146.77 கோடி. ஆனால் அதே காலகட்டத்தில் கடனுக்காக செலுத்திய வட்டித் தொகை ரூ.31,980.19 கோடி. இதே நிலை நீடித்தால் தமிழக அரசின் நிதி நிலைமை மேலும் மோசமடையும்," என மதுரை மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.