சென்னை: நடிகர் விஜய், சைக்கிளில் வந்து நீலாங்கரைப் பகுதியில் தனது வாக்கை அளித்தார்.
ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் அவரைச் சுற்றி முன்னும் பின்னும் தொடர்ந்து வர, சைக்கிளில் சென்று அவர் வாக்களித்திருப்பது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் விலை உயர்வைச் சுட்டிக்காட்டும் விதத்தில் தான் அவர் சைக்கிளில் சென்று வாக்களித்தாரா என்று விஜய்யின் நடவடிக்கை குறித்து பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்நிலையில் விஜய்யின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கூறியபோது, வாக்குச்சாவடி பகுதிக்குள் வாகனங்கள் நுழைய முடியாது என்பதாலும் வாக்குச்சாவடி வீட்டுக்கு அருகே உள்ளது என்பதாலும் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்று அவர் கூறியுள்ளார்.