சென்னை: தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக சென்னை உள்ளது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பல்வேறு வசதிகள் செய்து கொடுத்தும் வீட்டுத் தனிமையில் உள்ள சில நோயாளிகள் வெளியில் சுற்றுவதாகப் புகார்கள் வருகின்றன. அவ்வாறு சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
"அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் வெளியே சுற்றித் திரிபவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்," என எச்சரித்துள்ளார்.
தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் சுமார் 70 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமையில் உள்ளனர். அவர்களுக்கு பால், மளிகை, காய்கறி, மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாநகராட்சி சார்பில் சுமார் 2,000 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என பிரகாஷ் கூறினார்.