சென்னை: ஊரடங்கு காலத்திலும் அம்மா உணவகங்கள் செயல்பட அனுமதித்ததையும் 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதையும் முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
"கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய்த் தொற்றுப் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன். மே 10ஆம் தேதி முதல் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் இன்றும் நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டம் கூடுதலை தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.